கோவில்பட்டியில் பெயின்டர் சரமாரி வெட்டிக் கொலை
1 min read
6.8.2020
Painter stabbed to death in Kovilpattiதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (30). பெயின்டரான இவர், நேற்று மாலை கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள், கோடீஸ்வரன் ஓட்டி சென்ற பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவரை, சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுபட்ட கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி கலைக்கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கோடீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரனுக்கும், கோவில்பட்டி அருகே கடலையூரை சேர்ந்த ராக்கம்மாள் என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே கோடீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்னையில் ராக்கம்மாள், கோடீஸ்வரனை விட்டு கடந்த 3 மாதமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்தான் கோடீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.