June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

அவரது அடையாளமாக மாறிய “மஞ்சள் துண்டு”; அதற்கும் ஒரு காரணம் உண்டு

1 min read


The “yellow piece” that became Kurunanethi symbol; There is a reason for that too

1996-ம் ஆண்டு தேர்தலில் திமுக அமோக வெற்றி. திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் (தமாகா, இந்திய கம்யூ) உள்பட) அள்ளிய தொகுதிகள் 224. முந்திய (1991) தேர்தலில் ராஜீவ்காந்தி கொலையால் எழுந்த கோப அலையில், அபாண்டமாக பழி சுமத்தப்பட்ட திமுகழகம் துடைத்து எறியப்பட்டது. கலைஞர் ஒருவர் மட்டும் துறைமுகத்தில் வெற்றி பெற்றார். உடனே திமுக இனி அவ்வளவு தான் என்று சித்தாந்த எதிரிகள் கொண்டாடினர். 

அப்படி இருக்க, 5 ஆண்டில் இப்படி ஓர் இமாலய வெற்றி எப்படி சாத்தியம் என்று பலரும் மண்டையை குடைந்தனர். 

திமுக வெற்றியை சகித்துக்கொள்ள முடியாத சில “போலி நடுநிலை”கள், எல்லாம் ரஜினியால் கிடைத்த வெற்றி என்று அளந்து விட்டனர். ரஜினியும், மூப்பனாரும் மட்டும் கூட்டு சேர்ந்து இருந்தால் ரஜினி முதல்-அமைச்சர்; மூப்பனார் பிரதமர் என்று கூட திரைக்கதை எழுதினர். கலைஞர் இதையெல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அவரிடம் “இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணம் என்ன?” என்று கேட்டபோது, நெற்றியடியாக “ஜெயல லிதா” என்று ஒரே வார்த்தையில் பதில் கூறினார். (1991-96 ஜெய லலிதா ஆட்சியின் சர்வாதிகாரம் அப்படி).

ஆரிய ஆதரவுக்கூட்டம் அவிழ்த்து விட்ட கதை

இவற்றுக்கெல்லாம் மத்தியில், இன்று “சங்கி”களாக நடமாடும் அன்றைய ஆரிய ஆதரவுக்கூட்டம் ஒரு கதையை அவிழ்த்து விட்டது. அது தான் மஞ்சள் துண்டு கதை.

அதாவது, 1996 தேர்தல் நெருக்கத்தில் கலைஞர் தோளில் மஞ்சள் துண்டு அணியத்தொடங்கி இருந்தார். அது அவருக்கு இன்னும் அழகாகவே இருந்தது. அவர் மஞ்சள் துண்டு அணிந்து வலம் வந்த தேர்தலில் அமோக வெற்றியும் கிடைத்து விட்டதா? சங்கிக்கூட்டம் திரைக்கதை எழுதத் தொடங்கி விட்டது. 

” கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு அணிந்தால் தான் ராசி என ஜோதிடர்கள் கூறி விட்டனர். அதனால் தான் அவர் மஞ்சள் துண்டு அணிகிறார். 

 கூட ராசி நம்பிக்கை வந்து விட்டது” என்று கிண்டல் அடித்தனர்.

இந்த கேலி-கிண்டலையெல்லாம் கலைஞர் பொருட்படுத்தவே இல்லை. மஞ்சள் துண்டு அணிவது ஏன் என்ற விளக்கத்தை அவரே அளித்தார். இதோ அந்த விளக்கம்:–

வலது கன்னத்து வீக்கம்

” 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எண்ணெய் தடவி உடம்பு வழித்துக் கொண்டிருந்த போது 

 திடீரென்று என் வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகவும் 

 தொடங்கியது. 

உடனே  நரம்பியல் நிபுணர் டாக்டர் இராமமூர்த்தி அவர்களும் ,  டாக்டர் கோபால் அவர்களும், என்னை சென்னை மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பல்வேறு சோதனைகளைச் செய்தனர்.

 வலது கன்னத்தில் உமிழ்நீர் சுரப்பியுடன்  இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில்  சிறிய அளவு  வெடிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உமிழ் நீர் தேங்கி, அதனால் அந்த வீக்கம் என்று கண்டறியப்பட்டது.

 வலதுபுறம் வாய்க்குள் அறுவை சிகிச்சை செய்து இதை சரி செய்யலாம் என முடிவெடுத்த டாக்டர்கள் என்னை 

ஆபரேஷன் தியேட்டருக்குள் இட்டுச் சென்றனர்.

அறுவை சிகிச்சைக்குத் தயாராக முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு – மீண்டும் டாக்டர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அறுவை சிகிச்சையினால் எதிர்விளைவுகள் எதுவும் ஏற்படுமோ

 என்ற அய்யப்பாட்டின் அடிப்படையில்தான் டாக்டர்களுக்குக்கிடையே அந்த விவாதம் நடைபெற்றிருக்கிறது.

 டாக்டர்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோதே என் வலது கண் வீக்கம் சிறிது குறைந்து கொண்டு வந்திருக்கிறது. 

கடைசியாக ஒரு வழியாக அறுவை சிகிச்சை வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு சில நாட்கள் சில மாத்திரைகள் மட்டும் நாள்தோறும் சாப்பிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அதற்குள் மலர்  மருத்துவமனைக்கு ஏராளமான  தொலைபேசிகள்,  நண்பர்கள்,  கழகக் கண்மணிகளிடம் இருந்து!

மருத்துவர்கள் அளித்த யோசனை

தொடர்ந்து என்னை சந்தித்த டாக்டர்கள், கழுத்துப் பகுதியும் முகம் உள்ளிட்ட தோள் பகுதியும்  எப்போதும் கதகதப்பான வெம்மையுடன் இருக்கவேண்டுமென்றும் அதற்கு  நான் வழக்கமாக அணியும் கைத்தறித் துண்டுக்குப் பதிலாக கம்பளிச் சால்வையைக் கழுத்தின் மீது பட்டுக் கொண்டிருக்கும்படியாக அணிவது நல்லது என்றும் வலியுறுத்திக் கூறினார்கள்.

அப்படிக் கம்பளி சால்வை அணிந்து கொண்டால் கழுத்து வலிக்காமல் இருப்பதற்கும் கன்னத்தில் சிறு வீக்கம் பெரிதாகாமல் இருப்பதற்கும் நல்ல பாதுகாப்பு என்றும் டாக்டர்கள் கூறினர்.

 அவர்களின் அறிவுரை கேட்டு அப்போது நான் உடனடியாக அணிந்து கொண்டது மஞ்சள் நிற சால்வையாக இருந்தது.

 தொடர்ந்து இரண்டொரு நாள் மஞ்சள் சால்வையை என் கழுத்தை வளைத்துப் போட்டுக் கொண்டதைக் கண்ட என் வீட்டில் உள்ளவர்களும், நண்பர்களும் – “இது நன்றாக இருக்கிறது – இதையே உங்களுக்குத் தனி அடையாளமாக இதே வண்ணத்தில் எப்போதும் அணிந்திடுங்கள்” என்று அன்புடன் கட்டளையிட்டனர்.

அடையாளமாகச் சிலர் தாடி வைத்துக் கொண்டிருப்பதைப் போல,  சிலர் தொப்பி அணிந்து கொண்டிருப்பதைப்போல  சிலர்  கையில் பிரம்பு வைத்துக் கொண்டிருப்பதைப்போல, நமக்கும் மஞ்சள் சால்வை அடையாளமாக இருக்கட்டுமே என்று எண்ணினேன், தொடர்ந்து அணிந்துவருகிறேன். 

இந்தச் சால்வை சிலரது  கேலிக்கும், கிண்டலுக்கும் உரியதாகியிருக்கிறது என்பதைக் கண்டும்,  கேட்டும் எனக்குச் சிரிப்பு மேலிடுகிறதே தவிர சீற்றம் பிறக்க வில்லை .

பதவியில் நிலைக்க வேண்டுமென்பதற்காக, மீண்டும் மீண்டும் பதவிபெறவேண்டும் என்பதற்காக 

ஏதோ பகுத்தறிவுக்கு ஒவ்வாத முறையில் மஞ்சள் துண்டு போட்டுக் கொண்டிருப்பதாகச் சிலர் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். 

‘வெள்ளைத்துண்டும் வெற்றி தேடித்தந்தது’

வெறும் வெள்ளைத் துண்டு போட்டுக் கொண்டிருந்தபோதுதான் 1957 தேர்தலில் வென்றேன். 1962 தேர்தலில் வென்றேன். 1967 தேர்தலில் வென்று அண்ணாவின் அரசில்  பொதுப்பணி அமைச்சராக ஆனேன்.1969 ல் 

 முதலமைச்சராக ஆனபோதும் வெள்ளைத் துண்டுதான் ! 

1971ல் 185 இடங்களில் கழகம் வென்று இரண்டாவது முறை முதலமைச்சர் ஆன போதும் வெள்ளைத் துண்டுதான் ! 

 ஐந்தாண்டுக்கு ஒரு மாதம் குறைய அந்த ஆட்சிக் காலத்திலும் நான் அணிந்திருந்தது வெள்ளைத் துண்டுதான்! 

 1989 இல் மூன்றாவது முறை முதல்வராகத் தேர்வு பெற்றபோதும் வெள்ளைத் துண்டுதான்! 

 மூன்றாண்டுகளுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட கன்னத்து வீக்கம் காரணமாக நாலாவது முறை நான் முதலமைச்சர்  ஆவதற்கு முன்புதான் என் கழுத்தையும், தோளையும் மஞ்சள் துண்டு வளைத்துக் கொண்டது!”

இவ்வாறு  விளக்கம் அளித்த கலைஞரின் அடையாளமாக இறுதி வரை மஞ்சள் துண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

(தமிழகத்தின் மறக்கமுடியாத தலைவர் கலைஞர்;

தோற்றம்: ஜூன் 3, 1924.

மறைவு: ஆகஸ்டு 7, 2018).

—கட்டுரையாளர்: மணிராஜ், திருநெல்வேலி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.