14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மணி பர்ஸ் மீண்டும் வந்தது
1 min read
The purse that disappeared 14 years ago is back
9-8-2020
மும்பையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மணி பர்ஸ் மீண்டும் கிடைத்தது.
காணாமல் போன மணிபர்ஸ்
மும்பையில் பன்வேல் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் பதால்கர். கடந்த 2006ம் ஆண்டு மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, ஹேமந்த் பதால்கர் ரெயில் நிலையத்தில் தன்னுடைய மணி பர்சைத் தொலைத்துவிட்டார். இதுபற்றி அவர் ரெயில்வே போலீசாரிடம் புகார் செய்தார். அந்த மணி பர்சில் மொத்தம் 800 ரூபாய் இருந்தது.
போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் அவரது மணி பர்ஸ் கிடைக்கவில்லை. இதனால் ஹேமந்த் அந்த மணிபர்சை மறந்தே போய்விட்டார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம், ஹேமந்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் ரயில்வே போலீஸ் அதிகாரி பேசினார். அவர், “கடந்த 2006ம் ஆண்டு நீங்கள் ரெயில் நிலையத்தில் தவறவிட்ட உங்கள் மணி பர்ஸ் கிடைத்துவிட்டது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்.
14 ஆண்டுகளுக்கு பின்
இதைக் கேட்ட ஹேமந்த் ஆச்சரியத்தில் மூழ்கினார். அப்போது கொரோனா ஊரடங்கு கடுமையாக இருந்ததால் உடனடியாக அங்கு சென்று மணி பர்சை வாங்க முடியவில்லை.
மும்பையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டபின், ஹேமந்த், வாசி பகுதியில் உள்ள ரெயில்வே போலீசாரைச் சந்தித்தார். அவர் அவரது மணி பர்சை ஒப்படைத்தார்.
14 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அந்த மணி பர்சில் அப்போது வைத்திருந்த 300 ரூபாய் திரும்ப கிடைத்தது. 500 ரூபாய் செல்லாதது ஆனதால் அது கிடைக்கவில்லை.
பேட்டி
இதுகுறித்து ஹேமந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் 2006-ம் ஆண்டு எனது மணி பர்சைத் தவறவிட்டேன். பர்சில் சில கார்டுகள், ரூ.900 பணம் இருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பின் ரெயில்வே போலீசார் நான் தவறவிட்ட பர்சைக் கண்டுபிடித்து இப்போது திருப்பிக் கொடுத்தார்கள். நான் பர்சைத் தவறவிட்டபோது அதில் பழைய 500 ரூபாய் நோட்டு உள்பட ரூ.900 இருந்தது. 2016ம் ஆண்டு 500 ரூபாய் செல்லாது என, அறிவிக்கப்பட்டதால் அந்தப் பணத்தை போலீசார் என்னிடம் தரவில்லை. அதற்குப் பதிலாக ரூ.300 மட்டும் கொடுத்தனர். 100 ரூபாயை தபால் செலவுக்காக எடுத்துக்கொண்டனர். செல்லாமல் போன 500 ரூபாயை மாற்றிக் கொடுக்கிறோம். அதையும் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளனர். 14 ஆண்டுகளுக்குப் பின் என்னுடைய பணமும், பர்சும் கிடைத்தது மகிழ்ச்சியாகவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருடன்
இதுபற்றி ரயில்வே போலீசார் கூறுகையில், காணாமல் போன பர்ஸை சமீபத்தில் தான் திருடன் ஒருவனிடம் இருந்து கைப்பற்றினோம். அவனிடம் இருந்து ஒரு டஜன் ரூ.500 நோட்டுகளை பறிமுதல் செய்தோம். அவை அனைத்தும் பழைய ரூபாய் நோட்டுக்கள். இதனால் ஹேமந்த் தொலைத்த தொகையை திருப்பி கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவற்றை மாற்றித் தர வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.