இந்திய பொருளாதாரத்தை மீட்க 3 நடவடிக்கைகள்; மன்மோகன்சிங் அறிவுரை
1 min read
3 measures to revive the Indian economy; Manmohan Singh’s advice
10-8-2020
கொரோனா ஊரடங்கால் சரிந்துள்ள இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க உடனடியாக மூன்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய பொருளாதாரம்
கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கின்றன. அதேபோல் இந்தியாவின் பொருளாதாரமும் அதிக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
அந்த வீழ்ந்த பொருளாதாரத்தை சீர்தூக்க முன்னாள் பிரதமர் 3 ஆலோசனைகளை வழங்கி உள்ளார். இது தொடர்பாக பி.பி.சி.க்கு இ-மெயில் மூலம் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
துன்பம்
மத்திய அரசின் அதிர்ச்சிகரமான மற்றும் மோசமான அணுகுமுறை போன்ற காரணங்களால் மக்கள் அளவற்ற துன்பங்களுக்கு ஆளானார்கள். திடீரென ஊரடங்கு அறிவித்து, கடுமையாக அமல்படுத்தப்பட்டது சிந்தனையற்ற மற்றும் புத்திசாலித்தனமற்ற செயல்பாடு. இதுபோன்ற பொது சுகாதார அவசர நிலைகளை உள்ளூர் நிர்வாகத்தினரும், பொது சுகாதார துறை அதிகாரிகளும் சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
மத்திய அரசின் விரிவான வழிகாட்டுதல்களுடன் இதை செய்திருக்கலாம். கோவிட் 10க்கு எதிரான செயல்பாடுகளில் இன்னும் சீக்கிரத்திலேயே மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு அதிகாரம் அளித்திருக்க வேண்டும்.
இந்திய பொருளாதாரத்தை எதிர்வரும் காலத்தில் பழைய நிலைமைக்கு கொண்டு வர 3 நடவடிக்கைகள் அரசு மேற்கொள்ள வேண்டும்.
செலவழிக்கும் சக்தி
முதலாவதாக, மத்திய அரசு, மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து பாதுகாப்பு நிலை உறுதி செய்ய செய்ய வேண்டும். மேலும் கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும்.
இரண்டாவதாக, அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்க செய்ய வேண்டும்.
மூன்றாவதாக, நிறுவன தன்னாட்சி மற்றும் செயல்முறைகள் மூலம் நிதித்துறைக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.