சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான எஸ்.ஐ பால்துரை கொரோனாவுக்கு பலி
1 min read
10.8.2020
SI Balthurai arrested in Sathankulam affair kills Coronaசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.ஐ பால்துரை, சிகிச்சை பலனின்றி, மதுரை அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி ஊரடங்கின் போது, கடையை திறந்து வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் விடிய விடிய தாக்கப்பட்டதால் ஏற்பட்ட படுகாயங்களுடன் ஜூன் 20ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த கொலை வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ பால்துரை உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் எஸ்ஐ பால்துரை அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு, கொரோனா பாதிப்பு என கடந்த மாதம் 24ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை கொரோனா சிறப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் பால்துரையின் மனைவி மங்கையர்திலகம், மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹாவிடம் நேற்று முன்தினம் அளித்த மனுவில், ‘‘எனது கணவருக்கு சர்க்கரை, ஆஸ்துமா உள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிகிறது. எனது சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து, சிகிச்சை அளிக்க விரும்புகிறேன்’’ என கோரியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் பால்துரைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். இருப்பினும் ஏற்கனவே சர்க்கரை மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு இருந்ததால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 12.50 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவர் இறந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை 5 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் மற்றும் அவரது மகன் பிரவான் (30) ஆகியோர் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தனர். பால்துரை உயிரிழந்த தகவல் அறிந்ததும், அதிகாலை அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரும், கண்ணீர் விட்டு கதறியழுதனர்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் கைதானவர் என்பதால், எஸ்.ஐ. பால்துரையின் இறப்பு குறித்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் மாஜிஸ்திரேட் விசாரணை மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் அவரது உடல் சுகாதாரத் துறையினரின் வழிகாட்டுதல்படி, தகனம் செய்யப்படும் என போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிபிஐ விசாரிக்கவில்லை
பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கூறுகையில், ‘‘எனது கணவர் தட்டாரமடம் காவல் நிலையத்தில்தான் பணியில் இருந்தார். அவரை சாத்தான்குளத்திற்கு ஒரு வாரம் மட்டுமே மாற்றுப்பணி என அனுப்பினர். ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் எனது கணவருக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் அவரை 10வது குற்றவாளியாக கைது செய்துள்ளனர். அவரிடம் இதுவரை ஒருமுறை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை.
ஏற்கனவே அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளது. இத்துடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் இறந்து விட்டார். அரசு மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, அவருக்கு சிகிச்சை அளித்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார். எனது கணவரின் உடலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று தகனம் செய்ய விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.