பெங்களூரு வன்முறை; போலீஸ் துப்பாக்கி சூட்டில் 3 பேர் சாவு
1 min read
Bangalore violence; 3 killed in police shooting
12-8-2020
பெங்களூரு வன்முறையில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
வன்முறை
கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் இஸ்லாமிய மதம் குறித்தும், முகமது நபி குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் சமூகவலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், நவீனுக்கு எதிராக போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
ஆனால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என கூறி, 100-க்கும் மேற்பட்டோர் பெங்களூரு டி.ஜே. ஹள்ளி போலீஸ் நிலையத்தை சூழ்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தி உள்ளனர்.
மேலும் சீனிவாசமூர்த்தியின் வீட்டு முன்பு நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அங்கிருந்த சுமார் 10 வாகனங்களுக்கும் வீட்டுக்கும் தீவைத்தாக கூறப்படுகிறது.
துப்பாக்கி சூட்டில் 3 பேர் சாவு
சிலர் போலீஸ் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு, தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தி அங்கிருந்த பொருட்களுக்கும் தீ வைத்துள்ளனர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் இறந்தனர். 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கலவரக்காரர்கள் தாக்கியதில் கூடுதல் போலீஸ் கமிஷனர் உட்பட 60 போலீசார் காயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்ச்சைக்கு காரணமாக இருந்த நவீன் கைது செய்யப்பட்டார். மேலும் கலவரத்தில் ஈடுபட்ட தாக 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவிலுக்கு பாதுகாப்பு கொடுத்த முஸ்லிம்கள்
இந்த நிலையில் டிஜி ஹலி பகுதியில், ஷமபுரா மெயின் சாலையில், அனுமன் கோவில் உள்ளது. பெங்களூரு கலவரத்தை தொடர்ந்து, அப்பகுதியினர் கோவிலுக்கு வந்தனர். அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மனித சங்கிலி அமைத்து கோவிலுக்கு பாதுகாப்பு அளித்தனர்.
அந்த பகுதியில் வசிக்கும் முகமது காலித் என்பவர் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்தினோம். மேலும் அவர்கள் இந்து கோவிலை தாக்காமல் இருக்க நாங்கள் மனித சங்கிலி அமைத்து நின்றோம். இரவு 11:30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை பாதுகாப்புக்கு நின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.