கொரோனாவால் இறந்த நர்ஸ் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த கிராம மக்கள் -5பேர் மீது வழக்கு
1 min read
12.8.2020
Case against 5 villagers for preventing the burial of the body of a nurse who died of coronaராணிப்பேட்டை நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா.. இவர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தவர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.
அதனால் அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்து பார்த்ததில், கடந்த மாதம் 31-ம் தேதி தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் அவர் வேலூரில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வளவு நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அர்ச்சனா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இதையடுத்து அவரது சொந்த ஊரான நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அர்ச்சனாவை புதைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். அதற்காக சடலத்தையும் நேற்று மதியம் 3 மணிக்கு கல்லறை தோட்ட பகுதிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு வந்தனர்.. ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்த நர்ஸ் உடலை புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்ய ஆரம்பித்தனர்.
தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பாதுகாப்பாக உடல் அடக்கம் செய்யப்படும் என்று வருவாய்த்துறையினர் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்… ஆனால், உறவினர்கள் அஞ்சலி செலுத்தக்கூடாது, ஆம்புலன்சிலிருந்து நேரடியாக இறக்கி அடக்கம் செய்ய வேண்டும் என்று ஊர்மக்கள் கோரிக்கை வைக்க, அவைகளை அதிகாரிகள் ஏற்றனர்…
அதன்பிறகுதான், வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் முன்னிலையில், அர்ச்சனா உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை, தகராறு காரணமாக, கிட்டத்தட்ட 3 மணி நேரமாக அர்ச்சனாவின் சடலம், அவருக்காக வெட்டப்பட்ட குழிக்கு பக்கத்திலேயே கிடந்தது வேதனையை தந்தது.. சடலத்தை வைத்துக் கொண்டு உறவினர்கள் தவித்ததும் காண்போரை கலங்க வைத்தது.
இந்த நிலையில், நர்ஸ் அர்ச்சனா உடலை புதைக்க இடையூறு செய்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருத்துவம் பார்த்து, அதனால் தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது..
இப்படித்தான் சென்னையில் சைமன் டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பிறகு, கோர்ட் வரை இந்த விஷயம் சென்றது,.
இந்த விஷயத்தில், நம் சமூகத்திற்கான, முழு பாதுகாப்பை, உங்களுக்கு உறுதி அளிக்கிறோம். நம் உலகத்தில் இருந்து செல்பவர்களை, மதிப்புடனும், மரியாதையுடனும் அனுப்பி வைப்போம்” என்று அரசு சார்பில் பல நம்பிக்கைகள் தரப்பட்டன. ஆனாலும், மக்களுக்கு தொற்று அச்சம் போகவே இல்லை.. இதனால் மனித நேயமும் மங்கி கொண்டு வருவது கவலையை அளிப்பதாக உள்ளது.. இன்னும் இது சம்பந்தமான விழிப்புணர்வும் பொதுமக்களுக்கு உடனடி தேவையாக இருக்கிறது!