சுரண்டை டாஸ்மாக் சூப்பர்வைசர் கொலையில் 5பேர் கைது -திடுக்கிடும் தகவல்கள்
1 min read
முத்துசாமி
13.8.2020
5 arrested for killing Tasmac supervisorதென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வேப்பங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் (51). இடைகால் அருகே உள்ள சங்குபுரம் டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு உஷாராணி (41) என்ற மனைவியும், விஸ்வா (16), வினித் (14) என்ற 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் சாம்பவர்வடகரை அக்ரகார தெருவில் சொந்த வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன், உஷாராணி தனது மகன்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலை முத்துப்பாண்டியன் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சாம்பவர்வடகரை எஸ்ஐ செல்வி மற்றும் போலீசார் சென்று வீட்டிற்குள் பார்த்தபோது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் முத்துப்பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக சாம்பவர்வடகரை இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலையுண்ட முத்துப்பாண்டியன் மனைவிக்கும், சாம்பவர்வடகரை அக்ரகார தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த முத்துப்பாண்டியன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் தொடர்பை கைவிடவில்லை. மேலும் கள்ளக்காதலுக்கு முத்துப்பாண்டியன் இடையூறாக இருந்ததால் அவரை வாகனம் ஏற்றி கொல்ல முயற்சி நடந்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு 3 முறைக்கு மேல் கொலை முயற்சி நடந்ததாகவும், இதில் ஒரு முறை மட்டும் அவர், வாகனத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சைக்கு பின் குணமடைந்ததாகவும் தெரிகிறது. எனினும் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய முத்துப்பாண்டியன் இதனை யாரிடமும் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கள்ளக்காதல் ஜோடி, முத்துப்பாண்டியனை தீர்த்துக்கட்டும் போது ஊஷாராணி, ஊரில் இருந்தால் போலீசுக்கு சந்தேகம் ஏற்படும் என்ற எண்ணத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அவர், தனது குழந்தைகளுடன் சங்கரன்கோவிலில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று அதிகாலை வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த முத்துப்பாண்டியனை ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேர், கழுத்தை துண்டால் இறுக்கி, முகத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஆறுமுகம் உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே கள்ளக்காதலனுடன் ேசர்ந்து தீர்த்துக்கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.