தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா
1 min read
In Tamil nadu 5.835 person affected for corona today
13-8-2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5,835 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்த தகவலை தமிழக சுகாதாரத்துறை தினமும் மாலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 5,835 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், 5,810 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 25 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்கள் அனைவரையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,355 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,549 பேர் ஆண்கள், 2,286 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,93,226 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,27,100 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
இன்று மட்டும் 5,146 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி, வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உள்ளது.
தமிழகத்தில் உள்ள 134 ஆய்வகங்களில் இன்று மட்டும் 67,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவையும் சேர்த்து, இதுவரை 34 லட்சத்து 99 ஆயிரத்து 300 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
119 பேர் பலி
இன்று(வியாழக்கிழமை) மட்டும் கொரோனாவுக்கு 119 பேர் இறந்தனர். இவர்களில் 81 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 38 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள். இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 5,397 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 53,499 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 15 ஆயிரத்து 614 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 64 ஆயிரத்து 467 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 40 ஆயிரத்து 274 பேர்.
சென்னையில்….
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,13,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர, இன்று செங்கல்பட்டில் 453 பேருக்கும், திருவள்ளூரில் 390 பேருக்கும், கோவையில் 289 பேருக்கும், தேனியில் 286 பேருக்கும், கடலூரில் 258 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 243 பேருக்கும், விருதுநகரில் 219 பேருக்கும், திருநெல்வேலியில் 189 பேருக்கும், கன்னியாகுமரியில் 186 பேருக்கும் தென்காசியில் 138 பேருக்கும், தூத்துக்குடியில் 103 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இன்று(வியாழக்கிழமை) சென்னையில் 18 பேரும், செங்கல்பட்டு, கோவை, திருநெல்வேலியில் தலா 7 பேரும், காஞ்சிபுரம், கன்னியாகுமரியில் 6 பேரும், கடலூர், மதுரை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருவண்ணாமலையில் தலா 5 பேரும், புதுக்கோட்டை, தென்காசி, திருவள்ளூரில் தலா 4 பேரும், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 3 பேரும், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், ராணிப்பேட்டை, திருச்சி, விருதுநகரில் தலா 2 பேரும், அரியலூர், சிவகங்கை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 119 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,070 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,806 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக,
இன்று செங்கல்பட்டில் 488 பேரும், காஞ்சிபுரத்தில் 290 பேரும், திருவள்ளூரில் 282 பேரும், தேனியில் 275 பேரும், கன்னியாகுமரியில் 245 பேரும், தூத்துக்குடி, விருதுநகரில் தலா 225 பேரும், திருநெல்வேலியில் 203 பேரும் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.