மகள் கள்ளக்காதலை எதிர்த்த கணவர் படுகொலை -மனைவி, மகள் கள்ளக்காதலன் கைது
1 min read
14.8.2020
Husband murdered for resisting daughter’s fake love – wife, daughter’s boyfriend arrestedவிழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம்பலம் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன்(46). அதேபகுதியில் உள்ள அங்காளம்மன்கோயில் பூசாரியாக இருந்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், சத்யா, பவானி என்ற மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் 12ம் தேதி இரவு வழக்கம்போல் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். வீட்டின் பின்பக்க கதவை திறந்து வைத்து விட்டு படுத்திருந்த தனசேகரன் அதிகாலையில் தலையில் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, எஸ்ஐ மணிகண்டன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது மனைவி ராஜேஸ்வரி, மகள் சத்யாவிடம் நடத்திய விசாரணையில் தனசேகரனை தாங்கள் தான் கொலைசெய்தோம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்த மனைவி ராஜேஸ்வரி, போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனது மூத்த மகள் சத்யாவுக்கும், சின்னநெற்குணத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு முறைப்படி திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்நிலையில், குமாரின் உறவினர் புதுச்சேரி, அரியாங்குப்பத்தை சேர்ந்த முருகவேல் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது எனது மகளுக்கும், முருகவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை, குமார் கண்டித்தார். இதுதொடர்பாக எங்களிடையே மேலும் பிரச்னை அதிகரித்தது.
இந்நிலையில் எனது மகள் கர்ப்பமடைந்தார். பிரசவத்திற்காக எனது வீட்டிற்கு வந்திருந்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் 6 மாதம் கழித்து, குமார் வந்து சத்யாவை வீட்டிற்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவர் செல்லவில்லை. குமார் எனது மகளை சரியாக பார்த்துக் கொள்ளாததால் நானும் அனுப்பி வைக்கவில்லை.
இந்நிலையில் முருகவேல், குழந்தை பிறந்த பிறகும் எனது மகளை சந்தித்து வந்தார். அவர்கள், வாழ்க்கையை சந்தோஷமாக கடந்தனர். அப்போதுதான், எனது கணவர் இனிமேல், முருகவேலை சந்திக்கக்கூடாது என்று சத்தம்போட்டார். அடிக்கடி குடித்து விட்டுவந்து எனது மகளிடமும், என்னிடமும் பிரச்னை செய்து வந்தார். எவ்வளவோ பொறுத்து பார்த்தோம். ஆனால், எனது கணவர், முருகவேலை ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து பிரச்னை செய்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.
கொலை திட்டத்திற்கு முருகவேலும் உடந்தையாக இருந்தார். அதன்படி, சம்பவத்தன்று போதை தலைக்கேறிய நிலையில் எனது கணவர் வீட்டிற்கு வந்தார். போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது நானும், எனது மகளும் சேர்ந்து கத்தி, அரிவாள்மனையால் தலை, உடல்பகுதியை வெட்டி படுகொலை செய்தோம். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல், ரத்தக்கறையான ஆடைகளை மறைய வைத்து விட்டோம்.
நள்ளிரவானதும் தனசேகரன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடக்கும் தகவலை வெளியில் சொன்னோம். கொலையை மறைக்க ஏதோ பூனை, எலிகடித்து குதறிவிட்டதாக நாடகமாடினோம். ஆனால், போலீசார் எங்களை கண்டுபிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரி(40), அவரது மகள் சத்யா(20), உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் முருகவேல்(35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து பைக், கத்தி, அரிவாள்மனை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.