இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு; மத்திய மந்திரி தகவல்
1 min read
Corona mortality rate is low in India; Federal Minister Information
16-8-2020
இந்தியாவில் கொரோனாவுக்கு இறப்பவர்களின் விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.
கொரோனா
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கான மீட்பு விகிதம் உலகிலேயே இந்தியாவில் உயர்ந்து வருவதாகவும், இறப்பு விகிதம் மிக குறைவு என மத்திய சுகாதாரதுறை மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்தது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53,322 பேர் நோய் தொற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் தொற்றில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 18,62,258 ஆக அதிகரித்தது. நாட்டில் கொரோனா மீட்பு விகிதம் 72 சதவீதத்தை நெருங்குகிறது.
தற்போது நாட்டின் இறப்பு விகிதம் 1.93 சதவீதமாக குறைந்துள்ளது. நோய் பாதிப்புகளை குறைக்க தொடர்ந்து நடத்தப்படும் கணக்கெடுப்பு, பரிசோதனை, அணுகுமுறை அடிப்படையிலான மருத்துவ பரிசோதனைகள், வீட்டு தனிமை ஆகியவற்றின் மூலமாகவும் கொரோனா மீட்பு விகிதம் 71.91 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறினார்கள்.
63,490 பேருக்கு கொரோனா
இந்தியாவில் புதிதாக (நேற்று மட்டும்) 63,490 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,89,682 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 994 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49,980 ஆக உயர்ந்தது.
தற்போது 6,77,444 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுமொத்த கொரோனா பாதிப்பு விகிதத்தில் 26.16 சதவீதமாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதாவது நேற்று (சனிக்கிழமை) 7,46,608 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை இந்தியா முழுவதும் 2,93,09,703 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டன.