தொழில் போட்டியால் காருடன் 3 பேரை தீ வைத்து எரித்த கொடூரம்
1 min read
18.8.2020
3 people with car set on fireஆந்திராவின் விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர்கள் வேணுகோபால் ரெட்டி மற்றும் கங்காதர். இவர்கள் இருவரும் செகன்ட் ஹேண்ட் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்துள்ளார்கள். இதில் ஆரம்பத்திலிருந்தே லாபம் இல்லாத நிலையில், தொழில் மிகுந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இதனால் இருவருக்குள்ளும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் ஒன்றாகத் தொழில் செய்ய வேண்டாம் எனப் பிரிந்து சென்றுள்ளார்கள்.
இதற்கிடையே வேணுகோபால் ரெட்டி கங்காதருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளார். ஆனால் கங்காதர் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் வேணு கோபாலின் தொடர் வற்புறுத்தலால் நேற்றைய தினம் கங்காதர், அவரது மனைவி மற்றும் அவரது நண்பர் உள்ளிட்ட மூவரும் வேணுகோபால் ரெட்டியைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது காருக்குள் இருந்து கொண்டு நடந்த சம்பவங்களைக் குறித்து நான்கு பேரும் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். சுமார் 4.45 மணியளவில், வேணுகோபால் சிகரெட் புகைக்க வேண்டும் எனக் கூறிக் கொண்டு அவர் மட்டும் காரை விட்டு நைசாக கீழே இறங்கிச் சென்றுள்ளார்.
வேணுகோபால் கீழே இறங்கிய அடுத்த கணம், மது பாட்டிலில் தான் கொண்டு வந்த பெட்ரோலை காரில் ஊற்றி தீ வைத்து விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார். கார் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உள்ளே இருந்தவர்கள் அலறி துடித்தார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக காரில் இருந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதில் கங்காதர் மற்றும் அவரது மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஆனால் அவர்களுடன் வந்த நண்பருக்குக் கடுமையான தீ காயம் ஏற்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளார்கள்.
நடந்த சம்பவம் தொடர்பாக கங்காதரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். தொழிலில் ஏற்பட்ட பகைமை 3 பேரின் உயிரைக் காவு வாங்கப் பார்த்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.