தமிழகத்தில் ஒரேநாளில் 5,986 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 5,986 people in one day in Tamil Nadu
20-8-2020
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5,986 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரதங்களை தினமும் மாலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( வியாழக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) மட்டும் 5,986 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 5,967 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 19 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 139 ஆய்வகங்களில் இன்று மட்டும் 75,076 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 39 லட்சத்து 88 ஆயிரத்து 599 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
டிஸ்சார்ஜ்
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,629 பேர் ஆண்கள், 2,357 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 2,18,123 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,43,283 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 29 ஆகவும் உள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இன்று மட்டும் 5,742 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 01 ஆயிரத்து 913 ஆக உள்ளது.
116 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 116 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 72 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 44 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு , தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 53,283 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் உள்ளனர்.
இவர்களில் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 17 ஆயிரத்து 256 பேர். 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 124 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 46 ஆயிரத்து 55 பேர்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று (வியாழக்கிழமை) 1,177 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களையும் சேர்த்து சென்னையில் மட்டும் இதுவரை 1,21,450 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர இன்று செங்கல்பட்டில் 462 பேருக்கும், கோவையில் 397 பேருக்கும், திருவள்ளூரில் 393 பேருக்கும், சேலத்தில் 359 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 291 பேருக்கும், கடலூரில் 270 பேருக்கும், தேனியில் 233 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
தென்காசி
திருநெல்வேலி மாவட்டத்தில் 176 பேருக்கும், தென்காசியில் 132 பேருக்கும், தூத்துக்குடியல் 82 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 22 பேரும், கோவையில் 11 பேரும், சேலத்தில் 7 பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 6 பேரும், கடலூர், திருப்பத்தூர், வேலூரில் தலா 5 பேரும், திண்டுக்கல், காஞ்சிபுரம், தென்காசியில் தலா 4 பேரும், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், தேனி, திருவண்ணாமலை, திருநெல்வேலியில் தலா 3 பேரும், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருப்பூர், திருச்சியில் தலா 2 பேரும், அரியலூர், ஈரோடு, மதுரை, பெரம்பலூர் புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் என 116 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் சென்னையில் இன்று மட்டும் ஒரே நாளில் 1,132 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் சென்னையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,06,626 ஆக உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, இன்று செங்கல்பட்டில் 445 பேரும், திருவள்ளூரில் 404 பேரும், தேனியில் 387 பேரும், காஞ்சிபுரத்தில் 313 பேரும், விழுப்புரத்தில் 221 பேரும், தூத்துக்குடியில் 210 பேரும், நாகப்பட்டினம் 201 பேரும், திருவண்ணாமலையில் 196 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.