கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தண்டனையை ஏற்க தயார் ; வக்கீல் பிரசாந்த் பூஷண் கூறுகிறார்
1 min read
Ready to accept sentence in contempt of court case; Says lawyer Prashant Bhushan
20-8-2020
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தண்டனையை ஏற்க தயார் என்று அந்த வக்கீல் கூறியுள்ளார்.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கு
மூத்த வழக்கறிஞராக இருப்பவர் பிரசாந்த் பூஷண். சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை வக்கீல் பிரசாந்த் பூஷண் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இது பற்றி சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அவருக்கான தண்டனை தொடர்பான வாதம் இன்று ( வியாழக்கிழமை) நடைபெறுகிறது. கோர்ட்டில் பிரசாந்த் பூஷண் கூறியதாவது:-
விமர்சனம் அவசியம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான் குற்றவாளி எனக் கேட்டு வேதனையடைகிறேன். ஏனெனில் தண்டனை வழங்கப்படுவதால் அல்ல, நான் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுவதால். ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க ஒரு வெளிப்படையான விமர்சனம் அவசியம்.
எனது டுவீட்டுகள் மூலம் எனது மிக உயர்ந்த கடமையை நிறைவேற்றுவதாகவே நான் கருதுகிறேன். மன்னிப்பு கேட்பது எனது கடமையில் இருந்து விலகுவதாக இருக்கும். நான் கருணை கேட்கவில்லை.
தண்டனையை ஏற்க தயார்
நீதிமன்றம் விதிக்கும் எந்தவொரு தண்டனையையும் நான் மகிழ்ச்சியுடன் ஏற்க தயாராக இருக்கிறேன். எனது கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நீதிபதி குறித்த கருத்தில் தற்போதும் உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தனது சீராய்வு மனு மீதான விசாரணை முடிவடையும்வரை தண்டனை தொடர்பான வாதத்தை தள்ளி வைக்கும்படி பிரசாந்த் பூஷண் கேட்டுக்கொண்டார். இதனை நீதிபதிகள் நிராகரித்தனர். உங்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டாலும், சீராய்வு மனு மீதான விசாரணைக்கு பிறகே நிறைவேற்றப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.