June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

டெங்கு கொசுக்களை ஒழிக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை

1 min read
New US move to eradicate dengue mosquitoes

21-8-2020
டெங்கு கொசுக்களை ஒழிக்க அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் அங்கு டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் அனைத்தும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று கூறுகிறார்கள்.

டெங்கு

கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. இந்த நோய்களை எல்லா வகை கொசுக்களாலும் பரப்ப முடியாது. பெண் கொடுக்கள் முட்டையிடும் பருவத்தில் மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சும். அப்போதுதான் மனிதர்களுக்கு இதுபோன்ற நோய்கள் வருகின்றன.
நோய் பரப்பும் டெங்கு கொசுக்களை ஒழிக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் அவைகளை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

ரத்தத்தை குடிக்கும் பெண் கொசுக்களை கொல்ல கழிவு செல்லும் இடங்களில் கொசுப் புழுக்களை உண்ணும் மீன்கள் விடப்பட்டன. மேலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஆகும் செலவு அதிகம் எனக்கூறப்பட்டது. இதனால் இந்த திட்டங்கள் வெற்றி பெறவில்லை.

ஆண் கொசுக்கள்

இதைத்தொடர்ந்து ரத்தத்தை குடிக்கும், டெங்குவை பரப்பும் கொசுக்களை கொல்ல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் உற்பத்தி செய்து வெளியிட விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி நடத்தியது.

இந்த ஆராய்ச்சி கடந்த 2009-ம் ஆண்டு வெற்றிபெற்றது. இதையடுத்து, ‘கோடிக்கணக்கில் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை புளோரிடா தெருக்களில் விடலாம்’ என, விஞ்ஞானிகள் அறிவுறுத்தினர்.
இந்த மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மனிதர்களின் ரத்தத்தை குடிக்காது. அதற்குப் பதில்பூக்களில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சி உயிர் வாழும். இந்தக் கொசுக்கள் பெண் கொசுக்களுடன் இணையும்போது அவை சாக்கடை போன்ற கழிவுநீரில் முட்டைகளை இடும். அந்த முட்டைகளில் இருந்து வெளிவரும் கொசுப்புழுக்கள் சாக்கடையில் நீந்தும்போதே இறந்துவிடும்.
இதனால் கொசு உருவாகாமல் அது புழுவாக இருக்கும்போதே இறந்து கொசுக்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்.
இந்தத் திட்டம் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வெற்றிபெற்ற திட்டம்’ என, விஞ்ஞானிகள் விளக்கினர்.

ஆனால் இந்த திட்டத்திற்கு புளோரிடா மகாணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. மரபணு மாற்றப்பட்ட கொசுக்களை உணவாக உண்ணும் பறவைகள் இதனால் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர். இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இழுபறியில் இருந்தது.

அனுமதி

இந்த நிலையில் தற்போது புளோரிடா நீதிமன்றம் இந்தத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது, 75 கோடி மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஆண் கொசுக்கள் புளோரிடா வீதிகளில் விடப்பட்டுள்ளன. இதனால் டெங்கு கொசுக்கள் சில மாதங்களிலேயே ஒழியும் என நம்பப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.