கொழுந்தியாளுடன் தொடர்பால் வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொலை -தொழிலாளி வெறிச்செயல்
1 min read
22/8/2020
Welding workshop owner killed in illicit affairதூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அடுத்துள்ள மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் மதன் (32). இவர் குறுக்குச்சாலையில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த இந்து என்ற பெண்ணுக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மதன் அதே கிராமத்தைச் சேர்ந்த இசக்கியம்மாள் என்ற பெண்ணை இரண்டாவதாக காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணின் அக்காள் கணவரான அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மாரிமுத்து (36) என்பவருக்கும் மதனுக்கும் தகராறு இருந்து வந்தது.
மேலமுடிமண் கிராமத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் மதனும், மாரிமுத்துவும் பங்கேற்ற நிலையில் மாலை 3 மணி அளவில் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மதனை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மதனை அங்கிருந்தவர்கள் மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மாரிமுத்துவின் கொழுந்தியாளை மதன் காதலித்து கவர்ந்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.