“காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் தேவை”- சோனியாவுக்கு மூத்த தலைவர்கள் கடிதம்
1 min read
“Congress needs permanent leader” – Senior leaders letter to Sonia
23-8-2020
காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் தேவை என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ராகுல்காந்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்த தலைவர் பதவியில் இருந்து விலகினார். எவ்வளவோ கேட்டுக் கொண்டும் அவர் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
இதனால் தற்காலிக தலைவராக அவரது தாய் சோனியா காந்தி பொறுப்பு ஏற்றார். அவர் அந்த தற்காலிக பொறுப்பை ஏற்று குறிப்பிட்ட நாட்கள் ஆன நிலையில் கட்சியில் பலர் காங்கிரசுக்கு நிரந்தர தலைவர் தேவை என்று கூறத் தொடங்கி உள்ளனர்.
கடிதம்
இந்த நிலையில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியாவுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், கபில் சிபல், பூபேந்தர் சிங் ஹூடா, வீரப்ப மொய்லி, ராஜ்பாபர், மிலிந்த் தியோர், சந்தீப் தீக்ஷித், ரேணுகா சவுத்ரி, மணிஷ் திவாரி உள்பட 23 பேர் ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் எழுதி இருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர, திறமையான தலைவர் தேவை. அவர், மக்கள் அனைவருக்கும் தெரிந்தவராகவும், களத்தில் திறமையாக செயல்படுபவராகவும் இருக்க வேண்டும். இளைஞர்கள், காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கையை இழந்து வருவது குறித்து நேர்மையான முறையில் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அதிகாரம்
அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதுடன், மாநில நிர்வாகிகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், கட்சியின் அனைத்து மட்டத்திலும் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும். காங்கிரஸ் செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவுடன், ஒரு விஷயத்தில் பொறுப்பு ஏற்பதற்கு கூட்டு தலைமையை உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மன்மோகன் சிங் அல்லது ஏகே அந்தோணியை கட்சி தலைவராக்க வேணடும் என சில மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.