இந்தியாவில் 73 நாளில் கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி
1 min read
Free vaccination for corona in 73 days in India
23-8-2020
இந்தியாவில் இன்னும் 73 நாட்களில் கொரோனாவுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று பிசினஸ் டுடே அறிவித்துள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பூசி
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக மருந்தோ தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை.
பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கண்டு பிடித்து இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.
இந்தியாவில் 3 தடுப்பூசிகள் மனிதர்களுக்கான பரிசோதனை அளவில் இருப்பதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி கிடைத்துவிடும் எனவும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ரா ஜெனெகா ‛கோவிஷீல்ட்’ என்ற தடுப்பூசியை கண்டு பிடித்து உள்ளது. அது இன்னும் 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் என பிசினஸ் டுடே நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (NIP) கீழ் இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும் அது கூறியுள்ளது
மூன்றாம் கட்ட சோதனகைள்
இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனைகள், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உரிமங்கள் வாங்குவதற்கும், இந்தியா மற்றும் பிற 92 நாடுகளில் பிரத்தியேகமாக விற்பனை செய்வதற்கு ராயல்டி கட்டணம் செலுத்துவதற்கும் அஸ்ட்ரா ஜெனெகாவுடன் பிரத்யேக ஒப்பந்தத்தை செய்துள்ளது. மூன்றாம் கட்ட சோதனைகள் சனிக்கிழமை இந்தியாவின் 20 மையங்களில் தொடங்கியது. முக்கியமாக மராட்டிய மாநிலம் மும்பை, புனேயிலும், குஜராத்தின் ஆமதாபாத்திலும் 1,600 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசிகளை நேரடியாக வாங்குவதாக மத்திய அரசு ஏற்கனவே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்தியர்களுக்கு இலவசமாக நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீரம் நிறுவனத்திடமிருந்து 130 கோடி இந்திய குடிமக்களுக்கு 68 கோடி டோஸை அரசாங்கம் கோரியுள்ளது.
இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி பிசினஸ் டுடேவிடம் கூறியதாவது:
அரசாங்கம் எங்களுக்கு சிறப்பு உற்பத்தி முன்னுரிமை உரிமத்தை வழங்கியுள்ளது. 58 நாட்களில் சோதனைகளை முடிக்க, சோதனை நெறிமுறை செயல்முறைகளை விரைவாகக் கண்டறிந்துள்ளது. இதன் மூலம், 3ம் கட்டத்தின் முதல் டோசிங் கடந்த 22 முதல் நடந்து வருகிறது. இரண்டாவது டோஸ் 29 நாட்களுக்குப் பிறகு போடப்படும். இரண்டாவது டோஸ் போடப்பட்டு 29 நாட்கள் நிறைவடைந்ததும் அடுத்த 15 நாட்களில் இறுதி சோதனை தரவு வெளியிடப்படும். அந்த நேரத்தில், கோவிஷீல்ட்டை வணிகமயமாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
கோவிஷீல்ட் தவிர, ஐ.சி.எம்.ஆர் – பாரத் பயோடெக்கின் ‛கோவாக்சின்’ மற்றும் ஜைடஸ் காடிலாவின் ‛ஜைகோவ்-டி’ ஆகியவையும் தடுப்பூசி கண்டறிவதில் போட்டியிடுகின்றன.