“டிரம்ப் ஒரு பொய்யர்”- சகோதரி பகிரங்க குற்றச்சாட்டு
1 min read
"Trump is a liar"- sister public accusation
23-8-2020
அமெரிக்க அதிபர் டிரம்ப் கொடூரமானவர் என்றும் பொய்யர் என்றும் அவரது சகோதரி கூறியுள்ளார்.
டிரம்ப்
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து அவர் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தற்போது அவரது சகோதரியே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்பின் மூத்த சகோதரர் பெரட் டிரம்ப் ஜூனியரின் மகள் மேரி டிரம்ப் சமீபத்தில் ‘டூ மச் அண்ட் நெவர் எனப்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
அந்த புத்தகத்திற்கு துணை தலைப்பாக, ‘உலகின் மிக ஆபத்தான மனிதரை எப்படி என் குடும்பம் உருவாக்கியது’ என்றும் குறிபிட்டிருந்தார்.
கடந்த மாதம் (ஜூலை) வெளியிடப்பட்ட இப்புத்தகம், வெளியான முதல் நாளே கிட்டத்தட்ட பத்து லட்சம் பிரதிகள் விற்பனையானது.
அதை ‘பொய்களின் புத்தகம்’ என, வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அப்புத்தகத்திற்கு டிரம்பின் மறைந்த சகோதரர் ராபர்ட் டிரம்ப் நீதிமன்றம் மூலம் தடை பெற முயன்றது குறிப்பிடத்தக்கது.
சகோதரி குற்றச்சாட்டு
இந்த நிலையில் தான் இவர் டிரம்பின் சகோதரி மரியான் டிரம்புடன் மேற்கொண்ட ரகசிய உரையாடல்கள் ஊடகத்தில் கசிந்துள்ளது. அதில், தனது தம்பியை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பென்சைல்வேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் டிரம்ப் ஆள்மாறாட்டம் செய்து தான் தேர்ச்சி பெற்றதாக அதிர்ச்சி தகவல் கூறியுள்ளார்.
மேலும், ‘டிரம்பின் குடியேற்றக் கொள்கையான பெற்றோரிடமிருந்து குழந்தைகளை பிரித்து தடுப்பு முகாம்களுக்கு அனுப்புவது கொடூரமான செயல். டிரம்ப் மிகக் கொடூரமானவர், பொய்யர், கொள்கை இல்லாதவர்’ எனக் கூறியுள்ளார்.
இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.