சென்னை மாநகர பஸ் டிரைவர் குத்திக் கொலை: 2 மகன்களுடன் அண்ணன் கைது
1 min read
Chennai city bus driver stabbed to death: Brother arrested with 2 sons
25-8-2020
மேல்மலையனூர் அருகே சொத்து தகராறில் சென்னை மாநகர பஸ் டிரைவரை ஈட்டியால் குத்தி படுகொலை செய்த அண்ணன் மற்றும் அவரது 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
பஸ் டிரைவர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ராமதாஸ் (வயழ 48) என்ற மகனும், இரண்டாவது மனைவிக்கு கலைச்செல்வம் (38), கலைமணி (35) என 2 மகன்களும் உள்ளனர்.
ஏழுமலை இறந்த நிலையில் இரு மனைவியின் பிள்ளைகளிடையே பூர்வீக சொத்துக்களை பிரிப்பதில் பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வந்துள்ளது.
கலைச்செல்வம் சென்னை பெரம்பூர் மாநகர பேருந்து பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதேபோன்று ராமதாஸ் ஆலந்தூர் மாநகர பேருந்து பணிமனையில் டிவைராக உள்ளார்.
கொலை
தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் சொந்த கிராமமான அண்ணமங்கலத்துக்கு வந்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அண்ணன், தம்பி இடையே வீடு அமைந்துள்ள இடத்தில் கழிவறை கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, ராமதாஸ் மற்றும் அவரது மகன்கள் 3 பேரும் சேர்ந்து கலைச்செல்வத்தின் நெற்றி மற்றும் வயிற்றுப் பகுதியில் ஈட்டியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தடுக்க முயன்ற கலைச்செல்வத்தின் மனைவி காயத்திரி, தாய் வாசுகி அம்மாள் மற்றும் தாய்மாமன் ஆகியோரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
தகவலறிந்த வளத்தி போலீசார் வந்து படுகாயம் அடைந்த காயத்திரி உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக ராமதாஸ், அவரது மகன்கள் சூரியமூர்த்தி, சத்தியபிரகாஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். ராமதாசின் மற்றொரு மகன் சூரியபிரகாஷ் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.