சபரிமலை கோயில் நகையை வங்கியில் அடகு வைக்க முடிவு
1 min read
25.8.2020
Decision to mortgage Sabarimala temple jewelery in the bankகேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்த 37249 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 223 பேர் மரணமடைந்து உள்ளனர். தொடர்ந்து 20330 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களும் மூடப்பட்டன.
இதனால் அனைத்து தேவசம்போர்டுகளும் வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றன. பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தேசவசம்போட்டின் கீழ் மொத்தம் 1,252 கோயில்கள் உள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானத்தை வைத்து தான் மற்ற கோயில்கள் அனைத்தும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
தேவசம்போர்டு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக மாதம் ₹35 கோடி தேவைப்படுகிறது. தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை கோயில் வருமானத்தை ஈடுகட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அரசு ₹100 கொடுப்பதாக அறிவித்து இருந்தது. இதுவரை ₹30 கோடி மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு உள்ள நெருக்கடியை சமாளிக்க, கோயில்களில் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கியில் அடகு வைத்து பணம் பெற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு, ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை நடத்தி உள்ளார். இது ஒருபுறம் இருக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டில் 50 பியூன்கள், 140 கிளார்க் பதவிகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன.