பிரணாப் முகர்ஜி உடல்நிலை பின்னடைவு
1 min read
Pranab Mukherjee’s health deteriorating
31-8-2020
முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
பிரணாப் முகர்ஜி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூளையில் கட்டி இருந்தது கண்டிறப்பட்டது. அதை அகற்ற ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் அவர் கோமா நிலையை அடைந்தார்.
இதற்கிடையே அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னடைவு
இந்த நிலையில் ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக, மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்.
இவ்வாற அதில் கூறப்பட்டுள்ளது.
பிரணாப் முகர்ஜிக்கு செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டது என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அப்படி என்றால் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளை விரைவாக செயலிழக்க செய்வதுடன், பிற நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பது பொருளாகும்.