கல்வி அறிவில் கேரளா தொடர்ந்து முதலிடம்; தமிழகத்திற்கு 8-வது இடம்
1 min read
Kerala continues to top in education; 8th place for Tamil Nadu
7-9-2020
இந்தியாவில் கல்வி அறிவில் கேரளா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது.
ஆய்வு
தேசிய அளவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ.,) இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018-ம் ஆண்டு ஜூன் வரையிலான தேசிய மாதிரி சர்வேயை தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள 64,519 வீடுகள், 6,188 மண்டலங்களில் உள்ள 49,238 வீடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
ஒட்டு மொத்த இந்தியாவில் 77.7 பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 84.7 சதவீதம். பெண்கள் 70.3 சதவீதம். கிராமப்புறங்களில் 73.5 சதவீதம் பேரும், நகர்ப்புறங்களில் 87.7 சதவீதம் பேரும் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
கேரளா
இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா விளங்குகிறது. கல்வி அறிவில் முதலிடம் பெற்ற கேரளாவில் 96.2 சதவீதம் கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். இதற்கு அடுத்து டெல்லி 88.7 சதவீதத்துடன் 2வது இடத்தில் உள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் 87.6 சதவீதத்துடன் 3வது இடமும் வந்துள்ளது. இதற்கு அடுத்து இமாச்சல பிரதேசம் 86.6 சதவீதமும், அசாம் 85.9 சதவீதமும், மராட்டியம் 84.8 சதவீதமும், பஞ்சாப் 83.7 சதவீதமும் பெற்றுள்ளன.
தமிழகம்
தமிழகம் கல்வி அறிவில் 8-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில், கிராமப்புறத்தில் 77.5 சதவீதமும், நகரில் 89 சதவீத மக்களும் கல்வியறிவு பெற்று இருக்கிறார்கள. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 82.9 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 87.9 சதவீதம். பெண்கள் 77.9 சதவீதம்.
இந்தியாவில் ஆந்திர மாநிலம் 66.4 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களுடன் கடைசி இடம் பிடித்துள்ளது.
இவ்வாறு அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.