ஊட்டி பூங்கா நாளை முதல் திறப்பு; இ-பாஸ் மூலம் அனுமதி பெறலாம்
1 min read
Ooty Park opens tomorrow; Permission can be obtained through e-pass
8-9-2020
ஊட்டி பூங்கா நாளை முதல் திறக்கப்படுகிறது. ஆனால் அங்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார்.
சுற்றுலாத் தலம்
கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தடை செய்யப்பட்டது. சமீபத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சில சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதில் ஊட்டியும் அடங்கும்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இ-பாஸ்
நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்த அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு குறித்து தலைமை செயலாளரிடம் எடுத்து கூறப்பட்டது. இதையடுத்து இ-பாசில் சுற்றுலா என்ற பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது.
பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வருகிறவர்கள் இ-பாஸ் பெற்று வரலாம். ஒரு நாளைக்கு எத்தனை பேர் வர அனுமதிக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்படும். அவர்கள் வருவதால் நீலகிரியில் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏற்கனவே வேலை, தொழில் சம்பந்தமாக வருபவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதே நடைமுறை தொடர்ந்து இருக்கும். ஏற்கனவே காட்டேஜ், தங்கும் விடுதிகள் திறக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா சம்பந்தமாக வருகிறவர்கள் இ-பாசை காண்பித்து தங்கி கொள்ளலாம்.
தோட்டக்கலை பூங்கா
நீலகிரி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் ஊட்டி தோட்டக்கலை பூங்காக்கள் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திறக்கப்படுகிறது. அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
ஆனால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் வனத்துறையின் கீழ் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. ஏற்கனவே அரசு அறிவித்தபடி பொது பூங்காக்கள் மட்டும் திறக்கப்படுகிறது. பூங்காக்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு ஏற்ப உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
தற்போது மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளியிடங்களில் இருந்து வரும் நீலகிரி மக்கள் உள்ளூர் முகவரி ஆதார் அட்டையை காண்பித்து வரலாம். பிற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா சம்பந்தமாக நீலகிரிக்கு வருகிறவர்கள் எத்தனை நாள் தங்கி இருக்க விண்ணப்பிக்கிறார்களோ, அதற்கு ஏற்ப இ-பாஸ் வழங்கப்படும். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தொற்று உறுதியானால் தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தளர்வுகளை பொதுமக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. அறிகுறி தென்பட்டால் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.