நடிகர் சூர்யா மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு; சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதி கடிதம்
1 min read
Judge writes to Chennai High Court that contempt case may be filed against actor Surya
14-9-2020
மாணவ-மாணவிகள் 3 பேர் தற்கொலை பற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்தபோது, ‛உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது’ என குறிப்பிடடு இருந்தார். இதற்கு கோர்ட்டை அவமதித்து பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோர்ட்டு அவமதிப்பு
மருத்து படிப்புக்கான நீட் தேர்வு அச்சம் காரணமாக தேர்வுக்கு முந்தைய நாளில் தமிழகத்தில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி நடிகர் சூர்யா நேற்று கருத்து தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், “கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பதாக உள்ளது என்றும் அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரியும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக்கு உட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.