மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினமா ஏற்பு
1 min read
Central Minister Harsimrat Kaur Badal resigns
18-9-2020
மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். அவரது ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
மத்திய மந்திரி
பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியாக சிரோமணி அகாலிதளமும் உள்ளது. மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசில் அந்த கட்சிக்கு ஒரு மந்திரி பதவி ஒதுக்கப்பட்டது.
சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு பாராளுமன்றம் மக்களவையில் 2 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஒருவர் அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல். இன்னொருவர் அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல்.
இதில் சுக்பீர் சிங் பாதல் அந்தக் கட்கியின் பாராளுமன்ற குழு தலைவராக இருக்கிறார்.
அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதப்படுத்துதல் தொழில் துறை மந்திரியாக பதவி ஏற்றார்.
எதிர்ப்பு
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய மசோதாக்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது பாரதீய ஜனதா கூட்டணியில் இருக்கும் சிரோமணி அகாலிதளத்திற்கு தர்ம சங்கடத்தை ஏற்படத்தி உள்ளது.
ராஜினாமா
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய அகாலிதளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று திடீரென்று அறிவித்தார்.
ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினாலும் மத்திய அரசுக்கு சிரோமணி அகாலி தளத்தின் ஆதரவு தொடரும் என்றும் அப்போது அவர் கூறினார்.
இப்படி அவர் பேசிய சிறிது நேரத்தில் மத்திய மந்திரி பதவியில் இருந்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.
அவரது ராஜினாமா கடிதத்தை சிரோமணி அகாலிதள தலைவர் சுக்பீர் சிங் பாதலின் முதன்மை ஆலோசகர் ஹர்சரண் பெய்ன்ஸ் எடுத்துச் சென்று பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். மோடி அரசில் இருந்து விலகியதை ஹர்சிம்ரத் கவுர் டுவிட்டரிலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாகவும், விவசாயிகள் மகளாகவும், சகோதரியாகவும் இருப்பதில் தான் பெருமை கொள்வதாகவும் கூறியிருந்தார்.
ஏற்பு
இந்த நிலையில், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஹர்சிம்ரத் கவுர் பாதல் வசம் இருந்த உணவு பதப்படுத்துதல் தொழில் துறையை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.