July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லி மேல்-சபையில் அமளியில் ஈடுபட்ட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்டு

1 min read

8 members suspended in Delhi Rajya Sabha

21-9-2020

டெல்லி பாராளுமன்ற மேல்-சபையில் ( மாநிலங்கள் அவை) அமளியில் ஈடுபட்ட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

வேளாண் மசோதா

பாராளுமன்றத்தில் மேல்-சபையான மாநிலங்கள அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நேற்று 2 முக்கிய வேளாண் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மசோதாக்கள் மீது விவாதம் நடந்தபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மசோதாவில் உள்ள பாதகமான அம்சங்கள் குறித்து விளக்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவாதம் மதியம் வரை நீடித்தது.

அமளி

அதன்பின்னர், விவாதத்திற்கு பதிலளித்து வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசத் தொடங்கினார். அப்போது விவாதத்தை இன்றுடன் முடித்துக்கொள்ளக்கூடாது, நாளையும் நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் மந்திரி பதிலுரையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  அவையின் மையப்பகுதிக்கு வந்ததுடன்,  அவைத்தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகம் உள்ளிட்ட காகிதங்களை கிழித்து வீசினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

 பின்னர் எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

குற்றச்சாட்டு

மாநிலங்களவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன. அவையை நடத்திய துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக மனு அளித்தனர்.

சஸ்பெண்டு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மாநிலங்கள் அவை இன்று(திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது நேற்று எதிர்க்கட்சிகள் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கடும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் அமளியில் ஈடுபட்ட டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட 8 உறுப்பினர்களை ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக அவை தலைவர் வெங்கையாநாயுடு பேசியதாவது:-

மாநிலங்களவைக்கு நேற்று மோசமான நாள். அவையின் துணைத்தலைவர் மிரட்டப்பட்டுள்ளார், அவர் தனது கடமையைச் செய்ய விடாமல் தடுக்கப்பட்டுள்ளார். இது துரதிர்ஷ்டவசமானது, கண்டிக்கத்தக்கது. உங்களின் செயலை தயவு செய்து கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்.

அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கே.கே.ராஜேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர் உசைன், இளமாறன் கரீம் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.