June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்

1 min read

Thattarmadam trader murder case – transfer to CPCID

21-9-2020

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே நிலத்தகராறில் வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

கடத்திக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் திசையன்விளை போலீஸ் சரகம் தட்டார்மடம் அருகே சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஷ்லாஸ் மகன் செல்வன் (வயது 32). தண்ணீர் கேன் வியாபாரி. இவலை கடந்த 17-ந்தேதி சிலர் காரில் கடத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும் இந்த பிரச்சினை காரணமாக செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

இந்தக் கொலை தொடர்பாக செல்வனின் தாயார் எலிசபெத் புகார் கூறியுள்ளார். அந்த புகாரில், “திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் உள்பட எனது மகன்கள் மீது தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் பொய் புகார்களில் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்தியுள்ளனர்.” என்று கூறியுள்ளார்.

 இதையடுத்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்பட சிலர் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும். செல்வனின் உடலை நீதிபதி முன்னிலையில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். செல்வனின் மனைவிக்கு நிவாரண உதவி, அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செல்வனின் உடலை வாங்க மறுத்து, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட 2 பேர் இன்று ( திங்கட்கிழமை) சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.  சரண் அடைந்த இருவரையும் 3 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.சி.ஐ.டி

இதையடுத்து நிலத்தகராறில் தூத்துக்குடி இளைஞர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேலை அ.தி.மு.கவில் இருந்து நீக்கம் செய்து தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.