அண்ணன் காதலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் கொலை
1 min read
Murder of a policeman who was complicit in his brother’s love
29/9/2020
அண்ணன் காதலுக்கு உடந்தையாக இருந்த போலீஸ்காரர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
போலீஸ்காரர்
செங்கல்பட்டு அருகே பாலூர் பழையசீவரம் பெரியக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் இன்பரசு(வயது 29). இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு ஆயுதப்படை போலீசாக வேலையில் சேர்ந்தார். தற்போது புழல் சிறையில் பணியாற்றி வருகிறார்.
நேற்று (திங்கட்கிழமை) அவருடைய நண்பர்கள் போன் செய்து அருகிலுள்ள வயல் வெளிக்கு அவரை வரச்சொல்லியுள்ளனர். இதனையடுத்து, தனது மோட்டார் சைக்கிளில் இன்பரசு அங்கு சென்றார்.
நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.
கொலை
இந்த நிலையில், பழையசீவரம் காட்டுபகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிலர் ரத்தவெள்ளத்தில் கிடந்த சடலத்தைப் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் பாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீஸ்காரர் இன்பரசு என்பது தெரியவந்தது. மேலும் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
போலீசார் பிணத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது சம்பந்தமாக பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலைக்கான காரணம் பற்றி விசாரித்தனர்.
அண்ணனின் காதல்
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பழையசீவரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் என்பவரின் மகளும், அதை பகுதியைச் சேர்ந்த இன்பரசுவின் அண்ணன் அன்பரசும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலை ஊராட்சி மன்றத்தலைவர் பெருமாள் மற்றும் அவரது மகன் ராஜன் என்கிற வரதராஜன் ஆகியோர் ஏற்கவில்லை.
தனது அக்காவை மறந்துவிடும்படி பலமுறை வரதராஜன் கூறியும் அன்பரசு கேட்கவில்லை. இது சம்பந்தமாக இரு தரப்பு இடையே பலமுறை சண்டை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியில் நடந்த ஒருவரின் இறுதிசடங்கில் பங்கேற்ற அன்பரசன் மற்றும் அவரது அண்ணன் சிலம்பரசன் ஆகியோரை வரதராஜன் தாக்கியுள்ளார். இதைக்கேள்விப்பட்ட இன்பரசன் வரதராஜனிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அன்பரசு மீது இருந்த கோபம் அவரது தம்பி இன்பரசு மீதும் பாய்ந்தது. அண்ணனின் காதலுக்கு இன்பரசு உடந்தையாக இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிகிறது. வரதராஜன் கூலிப்படையை ஏவி, இன்பரசுவை கொலை செய்ததும் தெரியவந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செங்கல்பட்டில் அதிமுக பிரமுகர் சேகர் படுகொலை செய்யப்பட்டார். இப்போது, போலீஸ்காரர் படுகொலை செய்யபட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.