காங்கிரசில் இருந்து குஷ்பு நீக்கம்; பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்
1 min read
Khushbu’s removal from Congress; Joined the Bharatiya Janata Party
12/10/2020
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு அந்த கட்சியில் இருந்து இன்று காலை நீக்கப்பட்டார். அவர் பாரதீயஜனதா கட்சியில் இணைந்தார்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு ஆரம்பத்தில் தி.மு.க.வில் இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதாவது கடந்த 2010 முதல் தி.மு.க.வில் இருந்த நடிகை குஷ்பு , 2014ல் இருந்து காங்கிரசில் சேர்ந்தார். அந்த கட்சியில் அவருக்கு செய்தி தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக அவரது கருத்து கட்சியின் மேலிடத்திற்கு எதிராக இருந்தது. குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதியக் கல்விக் கொள்கையை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது. ஆனால் குஷ்பு புதியக் கல்விக் கொள்ககைளை வரவேற்றார்.
இதனால் அவர் பாரதீய ஜனதாவில் இணையப்போவதாக செய்திகள் பரவியது. ஆனால் அதை குஷ்பு மறுத்தார்.
நீக்கம்
இந்த நிலையில் குஷ்பு இன்று பாரதீய ஜனதாவில் இணைவார் என்று நேற்று பரபரப்பு செய்தி வெளியானது. இதற்கு குஷ்பு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் இது உறுதியான தகவல் என்றே சொல்லப்பட்டது.
இதனால் குஷ்புவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் மூத்த செயலாளர் பிரனவ்ஜா அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் குஷ்பு , ” நான் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்ள முடிவு செய்துள்ளேன்” என அறிக்கை விட்டார்.
பாரதீய ஜனதாவில்…
இதனை அடுத்து குஷ்பு, பாரதீய ஜனதாவில் சேருவதற்காக டெல்லி சென்றார். அங்கு பாரதீய ஜனதா கட்சி அலுவலகம் சென்று கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.
அதன்பின் அவர் தேசிய செயலர் ரவி முன்னிலையில் பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். அப்போது மாநில பா.ஜ., தலைவர் முருகன் உடன் இருந்தார்.