திருமண ஆசை காட்டி பெண்களிடம் நகை பறித்த வாலிபர் -கூட்டாளியுடன் கைது
1 min read
13.10.2020
Arrested with a teenager-partner who stole jewelery from women showing desire for marriageராமநாதபுரம் மாவட்டம் மஞ்சூரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜ். 30 வயதான இவர், திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு மணமகள் தேவை என்று இணையதளத்தில் உள்ள திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அப்போது அவருடைய செல்போன் எண்ணுக்கு ஏராளமான இளம்பெண்கள், விதவைகள் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களிடம் ஆசையாகப் பேசும் கார்த்திக், அந்த பெண்களிடம் திருமண ஆசை காட்டியுள்ளார்.
இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைத் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் திருவண்ணாமலையிலிருந்து கோவை வந்த கார்த்திக், அந்த பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் இருந்து 7 பவுன் நகையைப் பெற்றுச் சென்றார். பின்னர் அவர் அந்த நகையைத் திரும்பக் கொடுக்கவில்லை. இதனால் அதிர்ந்துபோன அந்த இளம்பெண் கார்த்திக் ராஜ் மீது சாய்பாபா காலணி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் திருவண்ணாமலைக்குச் சென்று கார்த்திக் ராஜைப் பிடித்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அதில் அவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் உள்படப் பல பெண்களிடம் திருமண ஆசைவார்த்தை கூறி நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
அதாவது தன்னை சினிமா கதாநாயகன் போல நினைத்துக் கொண்ட கார்த்திக், திருமண ஆசையில் இருக்கும் பெண்களிடம் முதலில் ஆசையாகப் பேசுவார். அப்போது தன்னிடம் பேசும் பெண்களிடம், எனக்கு வங்கியில் பணம் வர வேண்டி உள்ளது, ஆனால் அது வரச் சிறிது வாரங்கள் ஆகும். ஆனால் எனக்குக் கடன் பிரச்சினை உள்ளதால், நகை யை கொடுங்கள், அதை நான் அடமானம் வைத்து கடனை கொடுத்து விடுகிறேன். வங்கியிலிருந்து பணம் வந்ததும், நகையை மீட்டு உங்களிடம் திரும்பக் கொடுத்து விடுகிறேன் எனக் கூறுவார்.
இதை உண்மை என நம்பிய கோவையைச் சேர்ந்த 3 இளம்பெண்கள், பொள்ளாச்சி, ஈரோடு, ராஜபாளையம், சிவகாசி, பெரம்பூர், பெங்களூரு உள்படப் பல இளம் பெண்கள், விதவைகளிடம் இருந்து 50 பவுன் நகையை வாங்கி கார்த்திக் மோசடி செய்துள்ளார். இவர் மோசடி செய்த நகையை அடகு வைக்கவும், விற்பனை செய்யவும் இவரது நண்பர் பிரசாந்த் என்பவர் கூட்டாளியாகச் செயல்பட்டுள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்கள் 2 பேரிடம் இருந்தும் தற்போது 13 பவுன் நகை மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருமண ஆசையில் இருக்கும் பெண்களை வசமாகப் பேசி இளைஞர் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.