போலி கடிதம் மூலம் அரசு வேலை; நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
1 min read
Government work by forged letter; Nellai Collector Warning
24/10/2020
அரசுத்துறை வேலை என்று போலிக் கடிதத்தை நம்பி ஏமாற வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
போட்டித் தேர்வு
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலகில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2018-2019 ஆம் ஆண்டுகளில் துணை வட்டாட்சியர் பணியிடங்களுக்குப் போட்டித் தேர்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வரப் பெற்றதாகவும், இந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள நபர்கள் அரசு மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்று, அசல் கல்விச் சான்று மற்றும் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றுகளுடன் அக்.28-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (பொது) ஆஜராகத் தெரிவித்து, போலியாக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
ஏமாற வேண்டாம்
அவ்வாறு துணை வட்டாட்சியர் பணியிடங்களுக்கு நேரடியாக எவரும் தேர்வு செய்யப்படுவதில்லை. எனவே, போலியாக வரப்பெறும் அழைப்புக் கடிதங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். போலி அழைப்புக் கடிதம் வரப்பெற்ற நபர்களுக்குத் தொலைபேசியில் யாராவது தொடர்பு கொண்டு பணி நியமனம் பெற்று வழங்குவதாகக் கூறினால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.’
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.