காஷ்மீர் பயங்கரவாதிகளிடம் சீன துப்பாக்கிகள்
1 min read
Chinese guns to Kashmir terrorists
2/11/2020
பாரதீய ஜனதா நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய காஷ்மீர் பயங்கரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சீன துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
பாரதீய ஜனதா நிர்வாகி மீது தாக்குதல்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஹண்டர்பெல் மாவட்ட பாஜக துணைதலைவரான குலாம் காதீர் கடந்த மாதம் 6-ந் தேதி இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவருக்கு பாதுகாப்பிற்காக போலீஸ்காரர் முகமது அல்டாப் அங்கு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த 4 பயங்கரவாதிகள் குலாமை குறிவைத்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது குலாமை பாதுகாக்கும் பணியில் இருந்த போலீஸ்காரர் முகமது அல்டாப் உயிரிழந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்ற பயங்கரவாதிகள் தப்பிச்சென்றனர்.
3 பேர் கைது
இதையடுத்து, இந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்த காஷ்மீர் போலீசார் தப்பியோடிய பயங்கரவாதிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆகும்.
சீன துப்பாக்கிகள்
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கன்னிவெடிகள், பாகிஸ்தான் கொடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஹண்டர்பெல் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் சமூக வலைதளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இளைஞர்களை பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்க ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது.