கடைகளை உடைத்து ரூ.1.44 லட்சம் திருட்டு
1 min read
1.44 lakh theft by breaking into shops
2/11/2020
திசையன்விளை அருகே ஒரே நாளில் மர்மநபர்கள் 4 கடைகளை உடைத்து ரூ.1.44 லட்சத்தை திருடிச் சென்றனர்.
திருட்டு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் காண்டீபன். இவருடைய மகன் ரவிஸ் (வயது 31). இவர் திசையன்விளை- நவ்வலடி ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் ரவிஸ் நேற்று காலையில் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையின் ஷட்டரும் பாதி திறந்த நிலையில் கிடந்தது. பதறிப்போன அவர் உள்ளே சென்றபோது, கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.
நள்ளிரவில் மர்மநபர்கள், மளிகை கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
குளிர்பானக் கடை
இதே போல் அதே பகுதியில் குளிர்பான கடை வைத்துள்ள காரிகோவிலை சேர்ந்த ரமேஷ் (28) என்பவர் கடையின் முன்பக்க பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். கடையில் இருந்த ரூ.16 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். மேலும் திசைன்விளையை சேர்ந்த சக்திவேல் (42) என்பவரது குளிர்பான கடையிலும் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து ரூ.3 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இதேபோன்று அந்த கடை அருகில் உள்ள காஜா என்பவரது கடையை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் 2 வாகன சீட் கவர்களை திருடிச் சென்றுள்ளனர்.இது பற்றி 4 கடைக்காரர்களும் தனித்தனியாக கொடுத்துள்ள புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளில் திருடி கைவரிசை காட்டிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். திருட்டு நடைபெற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.