சபரிமலை அய்யப்பன்கோவிலில் மண்டல விளக்கு பூஜை நாளை தொடக்கம்
1 min read
Mahara vilakku Puja will begin tomorrow at Sabarimala Ayyappankovil
14/11/2020
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல விளக்குப் பூஜை நாளை தொடங்குகிறது.
மண்டல விளக்குப் பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மண்டல விளக்கு பூஜை தொடங்கப்படும். இதனை அடுத்து மகர விளக்கு பூஜை தொடங்கும். தை மாதம் 1-ந் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
இந்த காலங்களில்தான் பக்தர்கள் மிக அதிக அளவில் சபரிமலைக்குச் செல்வார்கள்.
இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள ஆழியில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி தீ மூட்டுவார்.
மறுநாள் (திங்கட்கிழமை) கார்த்திகை 1 முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதி நடைபெறும். அதன்பின் மகர விளக்கு பூஜை தொடங்கி ஜனவரி 14-ந் தேதி நிறைவடையும்.
ஆன்-லைன்
தற்போது கொரோனா ஊரடங்கு இருப்பதால் பம்பை ஆற்றில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக, பம்பை திருவேணியில் சிறப்பு குளியல் அறைகள் கட்டப்பட்டு உள்ளன.
மேலும் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தினசரி 1,000 பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2 ஆயிரம் பக்தர்களும், மண்டல மகர விளக்கு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களும் என நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழும், முககவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் மலை ஏறவேண்டும். மருத்துவ சான்றிதழ் இல்லாத பக்தர்கள் கண்டிப்பாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.