7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்
1 min read
The government will accept the tuition fees of all students who join the 7.5 percent reservation
21/11/2020
மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சேர 7.5 சதவீது உள் ஒதுக்கீடை தமிழக அரசு வழங்கியது. இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் பலர் பயன் அடைந்துள்ளனர். அதே நேரம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சில மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
எடப்பாடி அறிவிப்பு
இதனை அடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும். மாணவர்களின் கல்வி கட்டணம், விடுதி கட்டணத்தை அரசே அந்தந்த கல்லூரிகளுக்கு செலுத்தும்.
ஸ்காலர்ஷிப் வரும் வரை காத்திராமல் உடனடியாக செலுத்தும் வகையில் சுழல் நிதி உருவாக்கப்படும். இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி, விடுதி கட்டணத்தை ஏற்று மாணவர்களின் வாழ்வில் வசந்தத்தை அரசு ஏற்படுத்தி உள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள். அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என தெரிந்தே திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது நாடகம். திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.