கேரளா, மராட்டியத்தில் கொரோனா நிலவரம்
1 min read
Kerala, Maharashtra Corona Situation
21/11/2020
கேரளா மற்றும் மராட்டியதில் கொரோனா பரவல் நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
கேரளா
இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையிலும் குணமடைவோர் எண்ணிக்கையும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
கேரளாவில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 5,772 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 441 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 66 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6,719 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 88 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இன்று மட்டும் 25 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை
2,022 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியம்
இந்தியாவில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தொடக்கத்தில் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் பெருமளவு குறைந்து வருகிறது.
மராட்டியத்தில் இன்று மட்டும் 5,760 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதனால் மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 74 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது அந்த மாநிலத்தில் 79,873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,088 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 47 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் இன்று 62 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 573 ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனைகள்
இந்தியாவில் கொரோனா வைரசுக்கான பரிசோதனை எண்ணிக்கை மொத்தம் 13 கோடியை கடந்துள்ளன.
இவற்றில் கடந்த 10 நாட்களில் ஒரு கோடி பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. எனினும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த விகிதத்துடன் சரிவடைந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில், நேற்று வரையிலான கணக்கீடுகளின்படி, 13 கோடியே 6 லட்சத்து 57 ஆயிரத்து 808 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 22 பேருக்கு பரிசோதனைகள் நடந்துள்ளன என்று தெரிவித்து உள்ளது. எனினும், கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது பற்றிய அறிவிப்பு ஆறுதலளிக்கும் வகையில் உள்ளது.