சபரிமலைக்கு தினமும் 2 ஆயிரம் பேருக்கு அனுமதி
1 min read
Permission for 2 thousand people daily to Sabarimala
2/12/2020
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவிட்டு உள்ளது.
சபரிமலை
சபரிமலை அய்யப்பன் கோவில் தற்போது மண்டல விளக்கு பூஜை நடந்து வருகிறது. இதற்காக கடந்த மாதம் 15 ந்தேதி நடை திறக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வார நாட்களில் தினமும் 1,000 பக்தர்களும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் 2 ஆயிரம் பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
2 ஆயிரம் பேர்
இந்த நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான நிபுணர் குழுவும் சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக சிபாரிசு செய்தது.
அதைத்தொடர்ந்து சாமி தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான உத்தரவை கேரள அரசு வெளியிட்டு உள்ளது. இதன்படி வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மண்டல பூஜை நடைபெறும் வருகிற 26- ந்தேதி அன்றும் மகர விளக்கு பூஜை ஜனவரி 14 -ந் தேதியும் 2 நாட்கள் 6 ஆயிரம் மட்டும் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (புதன்கிழமை) தொடங்கியது.