தென்காசில் ரூ.119 கோடியில் கலெக்டர் அலுவலக கட்டிடம்; எடப்பாடி அடிக்கல் நாட்டினார்
1 min read
Rs 119 crore Collector’s Office building in Tenkos; Edappadi laid the foundation
11/12/2020
தென்காசியில் ரூ. 119 கோடி செலவில் மாவட்டம் கலெக்டர் அலுவலக கட்டப்படுகிறது. அதற்கு கணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
தென்காசி மாவட்டம்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18. 7. 2019 அன்று சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்த அறிவிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார் .
இதனை அடுத்து தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டதை 22 .11. 2019 அன்று முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கழித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள 11.11 ஏக்கர் நிலம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்துக்காக தேர்வு செய்யப்பட்டு, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு தென்காசி நகரில் 28 ஆயிரத்து 995 சதுர மீட்டர் பரப்பளவில், 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்படுகிறது. அந்த கட்டிடம் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட உள்ளது.
அடிக்கல் நாட்டினார்
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டித்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இந்த புதிய வளாகத்தில், மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், எல்காட் அலுவலகம், கூட்ட அரங்கு, நில அளவை உதவி இயக்குனர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், கூட்டுறவுத் துறை அலுவலகம் , பதிவுத் துறை அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம், சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை போன்ற துறைகளின் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர். பி.உதயகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அப்துல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பூங்கோதை எம்எல்ஏ கண்டனம்
தென்காசி கலெக்டர் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவில் திமுக எம்எல்ஏ பூங்கோதை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முஹம்மது அபூபக்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்காததால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை கூறியதாவது:-
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை ஆயிரப்பேரி அருகே அமைக்க அதிமுக எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் தனது சுய லாபத்துக்காக தீவிர முயற்சி எடுத்தார்.
அது சுற்றுச்சூழலுக்கு எதிரானது, போக்குவரத்துக்கு உகந்த இடம் எல்லை என்பன உட்பட பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, மக்கள் எளிதில் வந்து செல்லும் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும் என நானும், கடையநல்லூர் தொகுதி திமுக கூட்டணி எம்எல்ஏ முஹம்மது அபூபக்கரும் சுட்டிக்காட்டினோம். ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரப்பேரி அருகே அமைக்காமல் தடுத்ததில் திமுகவுக்கு பெரும் பங்கு உண்டு.
சரியான இடத்தில் கலெக்டர் அலுவலகம் அமைய திமுக தான் பெரும் முயற்சி எடுத்தது.
ஆனால், கலெக்டர் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவுக்கு எங்களுக்கு முறையான அழைப்பு விடுக்கவில்லை. முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்துதான் எங்களை அழைக்க வேண்டாம் என்று கூறியதாக சொல்கிறார்கள்.
அது உண்மை என்றால் முதல்-அமைச்சரை கடுமையாக கண்டிக்கிறோம். கலெக்டர் அலுவலகம் மக்கள் பணத்தில்தான் கட்டப்படுகிறது. ஆனால், மக்கள் பிரதிநிதிகளை அழைக்காமல் அடிக்கல் நாட்டு விழா நடத்தியது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.