3 குழந்தைகளுடன் கணவன்-மனைவி தற்கொலை
1 min read
Husband-wife suicide with 3 children
14/12/2020
விழுப்புரம் அருகே 3 குழந்தைகளுடன் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர்.
தச்சுத் தொழிலாளி
விழுப்புரம் அருகே வளவனூர் போலீஸ்சரகம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 32). தச்சுதொழிலாளி. இவரது மனைவி விமலா ஈஸ்வரி (28). இவர்களுக்கு 3 குழந்தைகள் இருந்தனர்.
நேற்று( ஞாயிற்றுக்கிழமை) இரவு மோகன் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். இன்று( திங்கட்கிழமை) காலை நீண்டநேரமாகியும் மோகனின் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை.
இதனை அடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மோகன் மற்றும் அவரது மனைவி விமலா ஈஸ்வரி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய 5 பேரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வளவனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
காரணம் என்ன?
மோகனுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர வேலை இல்லாத காரணத்தால் அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருந்தார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மோகன் அவதிபட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் மோகனிடம் பணத்தை திருப்பிகேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மோகன் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கணவன்-மனைவி இருவதும் தூங்கிகொண்டிருந்த குழந்தைகள் 3 பேரையும் ஒவ்வொருவராக தனிஅறைக்கு தூக்கி சென்று தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். அதன் பின்னர் கணவன்-மனைவி இருவரும் அதே அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.