குற்றாலம் அருவிகளில் நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி
1 min read
குற்றாலத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
Tourists will be allowed to bathe in Courtallam Falls from tomorrow
14/12/2020
குற்றாலம் அருவிகளில் நாளை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
அதன்பின் ஊரடங்கில் படிப்படியாக சில தளர்வுகள் அறிவிப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் பல சுற்றுலாத்தலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் குற்றாலம் அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை இருந்து வந்தது. இதனால் இந்த ஆண்டு சீசன் காலத்தில் எல்லா அருவிகளிலும் தண்ணீர் கொட்டியும் வெறிச்சோடி காணப்பட்டது.
சுற்றுலாப்பயணிகளும் வியாபாரிகளும் குற்றாலத்தில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் குற்றாலம் அருகில் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை என்று அரசு சார்பில் கூறப்பட்டது.
நாளை முதல் அனுமதி
இந்த நிலையில் தமிழக அரசு இன்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள கடற்கரைகள், சுற்றுலா தலங்களை வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் இன்று வழிகாட்டி நெறிமுறைகளுடன் திறக்கப்பட உள்ளதாக மாமல்லபுரம் தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
நாளை ( செவ்வாய்க்கிழமை) முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.