திருப்பதி கோவிலில் முதியோர்களும் தரிசனம் செய்ய அனுமதி
1 min read
Elderly people are allowed to visit the Tirupati temple
14/12/2020
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைகள், முதியோர் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி கோவில்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் இருந்து கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. அதன்பின் ஊரடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் முதியோர், 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மூத்த குடிமக்கள், குழந்தைகளை கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக, குழந்தைகளுக்கு முதல் தலைமுடி காணிக்கை செலுத்துதல், காது குத்துதல், அன்னப்பிரசாதம் ஊட்டுதல், பெயர் சூட்டுதல், முதியோர்களின் சஷ்டியப்த பூர்த்தி ஆகிய சடங்குகள் கோவில் பகுதியில் செய்வது என்றும், எனவே முதியோர்கள், குழந்தைகள், பக்தர்கள் ஆகியோரை கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தொலைப்பேசி மூலம் பக்தர்களிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சியில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அனுமதி
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கொரோனா தொற்று பரவலால் விதிக்கப்பட்டு இருந்த தடை மற்றும் கட்டுப்பாடுகளை நீக்கி 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 10 வயதுக்குட்பட்டோர் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம், எனத் தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வர வேண்டும் என்றும், கோவிலில் அவர்களுக்கு தனி வரிசைகள் இல்லை என்றும், டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.