“ரஜினியும் நானும் இணைந்து சாதனை புரிய சந்தர்ப்பம் வரும்”- கமல் பேட்டி
1 min read
“Rajini and I will have the opportunity to achieve together” – Kamal interview
14/12/2020
“ரஜினியும் நானும் இணைந்து சாதனை புரியும் சந்தர்ப்பம்” வரும் என்று கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது “சீரமைப்போம் தமிழகத்தை” என்னும் பெயரில் மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். தொடர்ந்து இளைஞர்கள், மகளிர், மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இரண்டாவது நாளான இன்றும் மதுரையில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கட்சி ஆரம்பித்தது ஏன்?
மதுரையில் நேற்று தொடங்கிய தேர்தல் பிரசாரம் எழுச்சியாக இருந்தது. இது தொடர்பாக எனது மகிழ்ச்சியை தொண்டர்களிடம் டுவிட்டரில் பகிர்ந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் மத்தியில் எங்களது நேர்மையை மக்களிடம் சொல்லி தேர்தலை சந்திப்போம்.
நேர்மையானவர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கின்றனர். அவர்களுக்கென ஒரு கட்சி ஏன் இருக்கக்கூடாது என்பதற்காக மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தோம்.
ஆளுங்கட்சியினர் பதற்றத்தில் உள்ளனர். தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பயந்து, எனது பிரச்சாரத்தில் பேசுவதற்கு தடை விதித்தாலும், அவர்களுக்கு எதிராக ஏற்கெனவே எல்லா இடத்திலும் விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. எங்களுக்கான மக்கள் ஆதரவை தடுக்கவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சந்தர்ப்பம் வரும்
நானும், ரஜினியும் கடுமையாக உழைத்த தொழிலிலேயே எங்களுக்குள் போட்டியில்லை. இருவரும் தெளிவான பாதையில் செல்கிறோம். திரை உலகில் நானும், ரஜினியும் சாதனை புரிந்துள்ளோம். அரசியலிலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என, ஓராண்டுக்கு முன்பே சொல்லி இருந்தேன். நாங்கள் சாதனை புரிய சந்தர்ப்பம் வரும்.
தற்போது மூன்றாவது கூட்டணி குறித்து எதுவும் கூற முடியாது. அது பற்றி விரைவில் அறிவிப்பேன். மதுரையிலுள்ள ஒரு மலைமேல் நின்று சத்தமிட்டால் பரமக்குடிக்கு கேட்கும். ஒருகாலத்தில் மதுரைக்கு வந்த பின்னரே பரமக்குடிக்கு செல்லவேண்டும்.
அதனால் மதுரையின் மீது எனக்கு அக்கறை அதிகம் என்பதால் 2-வது தலைநகராக மாற்றுவேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எங்கே என்பது பற்றி இப்போது கூற முடியாது.
நான் நாத்திகவாதி என்பதைவிட, எதையும் அறிந்து, புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட பகுத்தறிவாளன். மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், எங்களது பிரதிநிதிகள் டெல்லிக்குச் சென்று, அவர்களுடன் போராடிவிட்டும் வந்துள்ளனர்.
எம்.ஜி.ஆரை முன்னிலைப் படுத்த வில்லை
நடிகர் என்ற முறையில் எனக்கு மக்கள் கூடுகிறது என்றாலும், அதையும் தாண்டி மக்கள் வருகிறார்கள். அப்படி வந்ததால் தான் எம்ஜிஆர் புரட்சித் தலைவர் ஆனார். நடிகர் என்ற முறையில் நானும், அவரும் ஒரே இனம்.
நாங்கள் மூன்றாவது தேர்தலை சந்தித்தாலும், எங்களது பயணம் நேர்வழி, நேர்மை. ஊழல் இல்லாத அரசு அமைய முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். ஒரு நாடு, மாநிலம் வளரவேண்டும் என்றால், கார்ப்பரேட்டு கம்பெனிகளும் முக்கியம். இதை வரவேற்கிறோம். எம்ஜிஆரை நான் முன்னிலைப்படுத்தவில்லை. அவர் மட்டுமே எம்ஜிஆர். நான் கமலஹாசன்.
என்னை கா்ப்பரேட் இயக்குவதாக கூறுவது தவறு. நான் இளைஞராக இருந்தபோது, அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவில்லை.
மத்திய, மாநில அரசுகளுக்குள் ஒப்பந்தம் இருப்பதால் தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது என, மத்திய அரசு விருது வழங்குகிறது. நாங்கள் யாருக்கும் பி-டீம் அல்ல. காந்தியின் பி- டீம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.