தென்னை மரத்தில் 3½ மணி நேரம் தூங்கிய தொழிலாளி
1 min read
Worker sleeping 30 hours on a coconut tree
14/12/2020
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய தொழிலாளி மரத்தின் உச்சியில் 3½ மணிநேரம் தூங்கினார்.
தொழிலாளி
தஞ்சை கரந்தை, சருக்கை வேலூரை சேர்ந்தவர் லோகநாதன்(வயது40). இவர் தென்னை மரம் ஏறும் தொழிலாளி. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின், பராமரிப்பில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றார்.
தூங்கினார்
லோகநாதன் 2 மரங்களில் ஏறி தேங்காய்களை பறித்தார். அதன்பின் அவர் சோர்வாகி விட்டார். ஆனாலும் 3-வதாக ஒரு தென்னை மரத்தில் ஏறினார். அந்த மரத்தில் ஏறியவர் அயர்ந்து தூங்கினார். தென்னை மரத்தில் தென்னங் குலைகளுக்கு மேலே உள்ள மட்டையில் அமர்ந்தார். மற்ற மட்டைகளில் இரண்டு கைகளையும் விரி்த்தப்படி தூங்கினார். 55 அடி உயரம் கொண்ட அந்த தென்னை மரத்தில் 3½ மணி நேரம் தூங்கினார்.
நீண்டநேரமாகியும் தென்னை மரத்தில் இருந்து தேங்காய்களை பறித்து போடாதால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தென்னை மரங்கள் இருந்த பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு லோகநாதனை காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அவரை தேடினர். அப்போது லோகநாதன் தென்னை மரத்தின் உச்சியில் தென்னங் குலைகளுக்கு மேலே இருந்த மட்டையில் படுத்து கிடந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் சத்தம்போட்டனர். ஆனால் லோகநாதனிடம் இருந்து எந்த அசைவும் இல்லை.
தீயணைப்பு படையினர்
இதனால் அந்த பகுதியில் மக்கள் ஏராளமானோர் கூடினர். அனைவரும் சத்தம் எழுப்பியும் எந்த அசைவும் இன்றி லோகநாதன் படுத்து இருந்ததால் விபரீதம் நடந்து இருக்கலாம் என்று அச்சம் கொண்டனர்.
இதனால் தஞ்சை மேற்கு போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். .
தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முதலில் பேட்டரி மைக் மூலம் கீழே இருந்து அதிக ஒலி எழுப்பி லோகநாதனை அழைத்தனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தென்னை மரத்தில் இரும்பு ஏணியை வைத்து தீயணைப்பு வீரர், ஒருவர் வேகமாக மரத்தில் ஏறினார். நீளமான கயிற்றை கட்டி லோகநாதனை கீழே இறக்கலாம் என நினைத்து கயிற்றுடன் மேல சென்ற வீரருக்கு லோகநாதனின் முனங்கல் சத்தம் கேட்டது. இதனால் அவர், தூக்கத்தில் உள்ளார் என கருதிய தீயணைப்பு வீரர், சத்தமாக லோகநாதனின் பெயரை கூறி அழைத்தார். அப்போது, திடீரென கண்விழித்த லோகநாதன், மேலே இருந்து சுற்றி பார்த்துவிட்டு மீண்டும் தூங்கி வழிந்தார்.
இதனால் தீயணைப்பு வீரருடன் பொதுமக்களும் சேர்ந்து சத்தம்போட்டனர். இதை கேட்ட அவர், எழுந்து கீழே பார்த்தார். அப்போது மக்கள் அதிகமாக நிற்பதை கண்ட அவர் தென்னை மட்டையை பிடித்தபடி கீழே இறங்க முயன்றார். ஆனால் தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் அவரை கீழே இறங்கி வரச் சொன்னார்கள்.
ஆனால் தன்னால் மரத்தின் வழியாக இறங்க முடியும் என்று கூறிய லோகநாதன் வேகமாக மரத்தின் உச்சியில் இருந்து கீழே இறங்கினார்.
3½ மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவர் எந்த பிரச்சினையும் இன்றி கீழே இறங்கியதை பார்த்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பின்னர் லோகநாதனிடம் போலீசார் விசாரித்தபோது தேங்காய் பறிக்க சென்ற போது லேசாக அசந்து தூங்கி விட்டேன் என்று பதில் கூறினார். இதையடுத்து அவரை தஞ்சை மேற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புண்ணியமூர்த்தி விசாரணைக்காக மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.
பின்னர் அவரிடம் எழுத்துப்பூர்வமாக போலீசார் எழுதி வாங்கி கொண்டு இனிமேல் இப்படி செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர். லோகநாதன் இதேபோன்று ஏற்கனவே 2 முறை தென்னை மரத்திலேயே படுத்து தூங்கியதாக அவரது உறவினர்கள் கூறினார்கள்.