ஒரே கிராமத்தில் 200 கோழிகள் ரத்த வாந்தி எடுத்து சாவு
1 min read
In one village 200 chickens vomited blood and died
9.1.2021
திருப்பதி அருகே ஒரே கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட கோழிகள் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளன.
கோழிகள்
தற்போது கேரளா, இமாச்சல பிரதேசம் உள்பட சில மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. கேரளாவில் ஏரானமான வாத்துக்கள் இறந்தன. அதேபோல் கோழிகளும் இறந்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் கோழி, மற்றும் கோழி இறைச்சி இறக்குமதிக்கு தடைவிதித்து உள்ளன.
இந்த நிலையில் திருபதி அருகே ஒரே கிராமத்தில் கோழிகள் ரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:—
திருப்பதி அடுத்த சந்திரகிரி மல்லையபல்லி என்ற கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த ஊரில் வீடுகள் தோறும் 10 முதல் 20-க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையன்று அந்தக் கோழிகளை விற்று பணம் சம்பாதிக்கலாம் என்ற கருதி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்த்து வரும் நாட்டுக்கோழிகள் வாயில் ரத்தம் கசிந்து துடிதுடித்து இறந்தன. இப்படி ரத்த வாந்தி எடுத்து கோழிகள் மடிவதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது பறவை காய்ச்சல் தாக்கி கோழிகள் இறந்ததா என்று கவலை கொண்டுள்ளனர். இதுகுறித்து கால்நடைத் துறை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பறவைக்காய்ச்சல் இல்லை
கால்நடை டாக்டர்கள் மல்லையபல்லி கிராமத்துக்கு சென்று இறந்த கோழிகளை கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். சோதனையில் கோழிகள் பறவை காய்ச்சலில் இறக்க வில்லை என தெரியவந்தது.
இருந்தபோதிலும் ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 200-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தது மர்மமாக உள்ளது.