நீதிபதி அறிவுரையையும் மீறி விவசாயிகள் போராட்டம் நீடிக்கும் என அறிவிப்பு
1 min read
Notice that the farmers’ struggle will continue despite the judge’s advice
12.1.2021
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவுரையையும் மீறி விவசாயிகள் போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு மீது விசாரணை நடத்தி சுப்ரீம்கோர்ட்டு மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்தது .மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்று நீதிபதி கூறினார். மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த குழு எந்த உத்தரவுமோ அல்லது தண்டனையோ விதிக்காது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
குழு அமைக்கப்பட்டவுடன் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை திரும்ப பெற பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
போராட்டம் தொடரும்
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என் கூறி உள்ளனர்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின், 32 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:&-
சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ள குழுவில் இடம் பெற்றுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பாரதிய கிசான் யூனியன் பல்பீர் சிங் ராஜேவால் கூறும் போது, “இதுபோன்ற எந்தவொரு குழுவின் முன்பும் நாங்கள் ஆஜராக மாட்டோம் என்று நேற்று நாங்கள் கூறியிருந்தோம். எங்கள் போராட்டம் வழக்கம் போல் தொடரும். இந்த குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள். அவர்கள் அரசாங்கத்தின் சட்டங்களை நியாயப்படுத்தி வந்தனர்” என்றார்.
கிரந்திகாரி கிசான் யூனியன் தலைவர், தர்ஷன் பால் கூறும் போது, “ சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட எந்தவொரு குழுவையும் மத்தியஸ்தத்திற்காக நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூறி நேற்று இரவு ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டோம்.” என்றார்.