June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தைப்பிறந்தால் வழி பிறக்கும்-/ சிவகாசி முத்துமணி

1 min read

Thai pranthal veli perakkum / Sivakasi Muthumani

13.1.2021

தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம். தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம். மிக அருமையான ஒரு பழைய பாடல். நம்பிக்கை தரும் ஒரு பாடல்.
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்று கண்ணன் சொன்னதும். காலங்களில் அவள் வசந்தம் என்று பாடிய கண்ணதாசன் “மாதங்களில் அவள் மார்கழி” என்று தன் காதலியைச் சொன்னதும், மார்கழித் திங்களின் மகத்துவத்தை நமக்கு அறிவிக்கிறது. மார்கழித் திங்கள் ஒரு சிறந்த திங்கள் என்பதை புரிய வைக்கிறது. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்..ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை பாடி தன்னுடைய தோழியரோடு பாவை நோன்பு மேற்கொண்ட திங்கள் மார்கழி.
மார்கழித் திங்களில் அதிகாலையில் காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயு, வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும், அறிவியல் சொல்கிறது எது எப்படி ஆயினும் தமிழரைப் பொறுத்தவரையில் தைத் திங்களே முக்கியத்துவம் பெறுகிறது. அதைத்தான் மேற்கண்ட பாடல் வரி அழுத்தமாகச் சொல்லி அதற்கான காரணத்தையும் பின்னால் சொல்லுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் காரணம், அப்போதுதான் அறுவடை. தங்கச் சம்பா நெல் விளையும் காலம் அது.


விவசாயத்தை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்த காலம் அது. எப்போது செந்தில் விளைகிறதோ, அதுதானே வாழ்க்கையில் வசந்த காலமாக இருக்க முடியும். எனவே தை மாதத்தை தமிழர் எதிர்பார்த்திருந்து நம்பிக்கையோடு இப்படிப் பாடி இருக்கின்றனர்.
தைபிறந்தால் நம் கையில் செல்வம் கொழிக்கும் நாம் எதிர்பார்த்த அனைத்தையும் செய்யலாம். வீடு கட்டலாம் .வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். பிள்ளைகளுக்குத் திருமணம் நடத்தலாம். எல்லாவற்றிற்கும் ஒரு வழி பிறக்கும். தை பிறக்க வேண்டும் என்று தமிழர் நம்பினர்.
நல்ல நீர் வளம் நிரம்பிய பகுதியில் ஆண்டிற்கு மூன்று போகம் (நெல்லை மாவட்டத்தில் பூ எனப்படும்) நெல் விளையும். முப்போகம் என்று சொல்லலாம். நீர்வளம் சற்றுக் குன்றிய பகுதியில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நெல் விளையும். ஒரு போகம் விளையும் காலம் தை மாதம்தான். எனவே தை மாதம்தான் தமிழருக்கு வாழ்வை வளமாக்கும் திங்கள்.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டுவரும் மற்ற விழாக்களுக்கும் தைப்பொங்கல் விழாவிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. தீபாவளி, திருக்கார்த்திகை, நவராத்திரி போன்ற எண்ணற்ற விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடும் பழக்கம் நம்மிடத்தில் உண்டு. ஆயினும் அவ்விழாக்கள் யாவும் சமயம் சார்ந்தவை. மேலும் தீபாவளி போன்ற திருவிழாக்கள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படும் திருவிழாவாகத் திகழ்கிறது. நவராத்திரி போன்ற திருவிழாக்கள் தமிழ்நாட்டை விட வேறு சில மாநிலங்களில் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் தைப் பொங்கல் மட்டும் தமிழனின் சொந்த விழா. தமிழனின் பண்பாட்டு அடையாளம். வேறு எந்த இனமும் சொந்தம் கொண்டாட முடியாத ஒரு திருவிழா. தமிழர் திருவிழா. உலகில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கெல்லாம் சீரும் சிறப்போடும் கொண்டாடப்படுகிற விழா. சாதி, மத வேறுபாடு களிலிருந்துப் பிரித்து, தமிழன் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்தி, தமிழன் ‘என்றோர் இனமுண்டு’ என்பதை அடையாளப்படுத்தும் பண்பாட்டு விழா இந்தத் தைப்பொங்கல்.
சைவ, வைணவ மதங்கள் தமிழ்நாட்டில் காலூன்றும் முன்பே தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரியமிக்க பழமையான தமிழரின் தேசியத் திருவிழா. சங்ககாலத்தில் மழை பெய்ய வேண்டியும், வயல்வெளி செழிக்க வேண்டும் அறுவடை சிறக்க வேண்டியும் பெண்கள் விரதம் மேற்கொள்வர். அந்த விரதம் தைத்திங்கள் முதல் நாளில் நிறைவுறும். ஆம்… இதுவே பின்னாளில் தைத்திருநாள் என்றும், பொங்கல் விழா என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. தை முதல் நாளில் விரதம் நிறைவுறும் போது அறுவடையால் தம் வாழ்வைச் செழிக்கச் செய்த வளமிக்க நிலம், நல்ல மழை பொழியக் காரணமாக இருந்த சூரியக்கடவுள், வயலில் இறங்கி நம்மோடு வேலை செய்த மாடு, வயலுக்கு உரம் தந்த மற்ற கால்நடைகள் இவற்றிற்கு நன்றி கூறும் வகையில் பொங்கல் வைத்துக் கொண்டாடப்பட்டது. இது உழைப்பவர் திருநாள். உழவர் திருநாள். கால்நடைகளுக்கும் திருநாள்.
பொங்கல் விழா இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் போன்று தமிழர்கள் வாழும் இடங்கள் யாவிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இயற்கைக்கு நன்றி சொல்லும் விழாவாக.
எந்த விழாவிற்கும் இல்லாத பெருமை இந்த விழாவிற்கு உண்டு. நான்கு நாட்கள் கொண்டாடப்படுவது பொங்கல் திருவிழாவிற்கு மேலும் தனிச்சிறப்பு சேர்க்கிறது. பொதுவாகத் தைப் பொங்கல் என்று நாம் சொன்னாலும் இத்திருவிழா, மார்கழி மாதமே தொடங்கி விடுகிறது என்பது ஒரு சிறப்பு. மார்கழி திங்கள் கடைசி நாள், பொங்கல் விழாவின் முதல் நாளாகிய போகி எனப்படுகிறது போகிப் பண்டிகை என்று கூறுகிறோம். போக்கி என்பதுதான் போகி என்று மாறி இருக்கிறது. அதாவது பழையனவற்றைப் போக்குவது. பழையன கழிதல் என்று சொல்லலாம் . பழமை வேறு பழசு வேறு. பழமையை விட்டுவிடாமல் பழையதை மட்டும் போக்குதல். கழிதல் வேறு கழித்தல் வேறு.அதன் அடையாளமாக வீட்டில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு, இனிமேல் பயன்படா எனக் கருதும் பழைய பொருட்களைச் சேர்த்துத் தீயிலிட்டுக் கொளுத்தி விடுவர். இதன் பொருள் என்னவென்றால், நம்முடைய மனங்களில் நீண்டகாலமாக இருக்கும் வேண்டாத எண்ணங்கள், பகை, பொறாமை இன்னும் பொய் புரட்டு இவற்றையெல்லாம் தீயிலிட்டுக் கொளுத்துவது போல கொளுத்தி அழித்துவிட்டால், நம் மனதில் பேரின்பப் பொங்கல் பொங்கும். உண்மையான மகிழ்ச்சி பொங்க வேண்டுமானால் முந்தைய நாளே உன் மனதைச் சுத்தப் படுத்திக் கொள் என்பதுதான் போகிப்பண்டிகை நமக்குச் சொல்லும் தத்துவம். இதைப் புரிந்து கொள்ளாமல் வீட்டில் இருக்கிற பழைய மரபு காக்கின்ற பொருள்களையும் தூக்கித் தீயில் அல்லது தண்ணீரில் போட்டு அழித்துவிட்டு போகிக் கொண்டாடக் கூடாது. பொங்கல் பானையை நம்முடைய மனம் என்று நினைத்துக் கொள்வோம். அடுக்குப் பானை ஒன்றை அடுப்பில் வைத்து புத்தரிசி போட்டு பொங்கல் வைத்தல் என்னவாகும்? பொங்கல் பொங்குமா?. அதைப்போல நம் மனதில் அழுக்குகள் இருக்கிறவரை இன்பம் பொங்கவோ, இறைவன் வந்து தங்கவும் வாய்ப்பில்லை.

அடுத்தநாள் தைத்திங்கள் முதல் நாள். அதுவே பொங்கல் விழா என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் விழாவிற்குப் பத்து நாட்களுக்கு முன்னதாகவே வீட்டைச சுத்தப்படுத்தி, வெள்ளையடித்து புது வீடு போல் மாற்றிவிடுவார்கள். முன்பெல்லாம் வீட்டை புனரமைக்கும் பணியைப் பொங்கல் விழாவிற்கு முன்னதாகத்தான் செய்வர். பொங்கல் அன்று வீட்டு வாசலில் மண்ணாலான 3 கற்களால் அடுப்பு கூட்டி ,கோலம் செய்த புது மண்பானையில் வயலில் விளைந்த புது நெல்லில் கிடைத்த புத்தரிசி பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்து வீட்டின் வாசலில் கோலமிட்டு கரும்பு மஞ்சள் இவற்றால் அணிசெய்து தோரணங்கள் தொங்க விட்டு வழிபாடு செய்வது உண்டு. சர்க்கரைப் பொங்கல் உண்டு கரும்பு தின்று.. மகிழ்வோம். இன்றும் கிராமங்களில் 16 வகை காய்கறிகள் சமைக்கும் வழிபாடு நடத்துவர். அவரை புடலை, கத்தரி, கருணை, வாழை என எல்லாக் காய்களும் சமைத்து படையல் செய்வது வழக்கம். இவை தமிழரின் பண்பாட்டில் கலந்த பாரம்பரியமிக்க காய்கறிகள்.இப்பொங்கல் விழா கிறித்தவ ஆலயங்களில் கூட நடத்தப்படுகிறது என்பது சமயம் சார்ந்தது அல்ல பொங்கல் விழா என்பதற்கு ஒரு நல்ல சான்று.

புத்தரிசி, சர்க்கரை, பால் ,நெய் எல்லாம் சேர்த்து, புதுப்பானையில் வைக்கப்படும் பொங்கல். ஆடிமாதத்தில் விதைத்த நெல் மணிகள், நெற்றி வேர்வை சிந்தி பாடுபட்டதன் பயனாகப பல மடங்கு பெருகி, குவியலாக வீட்டிற்கு வந்த மகிழ்ச்சி. இவ்வழிபாட்டில் கரும்போடு பனங்கிழங்கு முக்கிய இடம் வகிப்பது கூர்ந்து நோக்கத்தக்கது. பொங்கல் எனும் சொல் கொதித்தல் சமைத்தல் செழித்தல் என்னும் பொருள்களோடு மிகுதல் எனும் பொருளும் தருகிறது மகிழ்ச்சி நிறைதல்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. தமிழனின் நன்றி மறவாமையை எடுத்துக்காட்டும் விளைவாக இது அமைகிறது. வயலில் நாம் மட்டுமா இறங்கி பாடுபட்டோம். நம்மோடு மாடுகள் இறங்கின. நம்மைவிட அதிகமாக உழைத்தன. மாடு என்பது ஒரு செல்வம் காட்டு விலங்குகளில் மாட்டை தான் முதன் முதலில் நாம் பயன்படுத்தினோம். வீட்டிற்குக் கொண்டு வந்தோம். வயலில் இறங்கி உழவு செய்தது முதல் வயலுக்கு பொருட்களை ஏற்றிச் சென்றது வரை இப்போது அறுவடை முடிந்து நெல்லை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பது முடிய மாடுகளின் பங்கு மகத்தானது. அத்தோடு மற்ற கால்நடைகளின் கழிவுகள் தான் பயிருக்கு உரமாகப் போடப்பட்டது.
எனவே அவற்றுக்கு நன்றி செலுத்தும் வகையில் தனியாக பொங்கல் வைத்து அவற்றின் வாயில் ஊட்டி விடுவது உண்டு. மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது மாடுகளைச் குளிக்கச் செய்வதும் சம்சாரிகளின் வீடுகளில் செய்யும் மகிழ்ச்சிக்குரிய நன்றி கூறும் நிகழ்வுகள். அன்றைய நாளில் குடும்பத்தோடு அருகில் உள்ள இயற்கை வளம் நிறைந்த பகுதிகளுக்கு சென்றுவரும் பழக்கமும் அக்காலத்தில் உண்டு ஆற்றங்கரை போன்ற பகுதிகளுக்கு.

நான்காவது நாள் காணும் பொங்கல். தமிழனுடைய பண்பாட்டைச் சொல்லும் காட்டும் விளைவாக அமைந்திருக்கிறது. மூத்தோரை மதித்தல் உறவினரைப் பேணுதல் நட்பை போற்றுதல்.. இவற்றையெல்லாம் இவ்விழா சொல்லித் தருகிறது. அன்றைய காலகட்டத்தில் உறவினர் எல்லாம் அருகருகே வாழ்ந்து வந்தனர். ஆயினும் காணும் பொங்கல் நாளில் வயதில் சிறியவர் பெரியவரை அவரிடத்தில் சென்று பார்த்து அவரிடம் வாழ்த்து பெற்று வருவது இந்த விழாவின் அடிப்படை. பிற்காலத்தில் அது மாறி நேரில் சென்று பார்க்க முடியாமல் அஞ்சல் மூலமாக மேல் நாட்டு பாணியில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வைத்து மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அது தமிழர் மரபு இல்லை நேரில் சென்று பார்த்து வருவது மரபு. இப்போது வாழ்த்து அட்டைகளும் மறைந்து போயின. கைப்பேசி இருக்கிறது குறுந்தகவல் இருக்கிறது. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என்று தவறாக எழுதி ஒரே நேரத்தில் அனைவருக்கும் அனுப்பிவிட்டு மீதி நேரமெல்லாம் தொலைக்காட்சி முன்னால் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கு 100 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு ஒருவர் 10 பேரை தூக்கிப்போட்டு மிதித்துக் கொண்டிருப்பார். அல்லது ஐந்தாறு பெண்களோடு ,என்ன என்ன அசிங்கம் உண்டோ அத்தனை அசைவுகளையும் காட்டி ஆடிக் கொண்டிருப்பார். நாம் அசையாமல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்போம். உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக.. இதுவா காணும்பொங்கல்? இதைக் காணவா காணும் பொங்கல்?.

உழைப்பவர் விழாவாக உழைப்பிற்கு பயன் கிடைத்ததைக் கொண்டாடும் விழாவாக, சேர்ந்து உழைத்தவருக்கு நன்றி சொல்லும் விழாவாக, பெரியோரை வாழ்த்தி வணங்கும் விழாவாக, நட்பை வளர்த்துக் கொள்ளும் விழாவாகத் தமிழரின் தனிப்பெரும் விழா தைப்பொங்கல் விழா.

தை மாதத்திற்கு முன்பே அறுவடை முடிந்துவிட்டால், நெல்லை மாவட்டத்தில் எல்லாம் புது நெல்லுச் சோறு என்று ஒரு நாள் சமைத்து சிறிய பொங்கல் விழா போல ஒன்றைக் கொண்டாடி விட்டாலும்(சிறுவயதில் எங்கள் வீட்டில் இது ஒரு சிறப்பான நாளாக அமையும் இன்னும் நினைப்பு ) தைப்பொங்கலை வழக்கம்போல் சிறப்பாககக் கொண்டாடுவது மரபு. திருமணம் செய்து கொடுத்து மக்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து பொங்கல் கொண்டாட, கரும்பு, அரிசி, மஞ்சள், புதுப்பானை இன்னும் சீர்வரிசை யோடு கொண்டுபோய் கொடுப்பதைப் பொங்கல் படி என்று கூறுவர்.

தொழிற்சாலைகளில் பொங்கலை யட்டி, தொழிலாளர்களுக்குப் பொங்கல் படி வழங்கப்படும். தமிழக அரசும் அரசு ஊழியர் அனைவருக்கும் ஆண்டுதோறும் பொங்கல் எப்படி வழங்குவது உண்டு. தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு என்று மேற்கண்ட பொருள்களோடு சேர்த்து, பணமும் வழங்குவது வழக்கமாகி விட்டது.
தைத்திங்கள் தண்கயம் படியும் என்று நற்றிணையும் பேசுகிறது. தைத்திங்கள் தண்கயம் போல என்று ஐங்குறு நூறு சொல்லுகிறது. தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ என்று கலித்தொகை சொல்லுகிறது. பொங்கல் விழா, தைத்திருநாள் உழவர் திருநாள் என்றெல்லாம் அழைக்கப்படும் இத்திருவிழாவைத் தமிழனின் பாரம்பரியமிக்க பழமையான விழா.தமிழகத்தின் பல்வேறு பள்ளிகள் கல்லூரிகளிலும் கூட குறிப்பாக வேளாண்மைக் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இவ்விழா பாரம்பரிய தன்மை மாறாமல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது அன்று ஒரு நாள் மாணவர், பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து வருவதைப் பார்த்திருக்கிறோம். தீபாவளிக்குப் புத்தாடை உடுத்தும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டது. முன்பெல்லாம் தைப் பொங்கலுக்குக்குத்தான் புத்தாடை எடுத்து உடுத்தி வந்தோம். நான் கூட அடிக்கடி வகுப்பில் சொல்வதுண்டு தைப்பொங்கலுக்கு புத்தாடை எடுத்து அணிந்து கொண்டாடுங்கள் அது நம்முடைய தனிப்பட்ட திருவிழா தமிழனின் சொத்து. வேறு எந்த விழாவிற்கும் கொடுக்காத சிறப்பைத் தைப்பொங்கலுக்குக் கொடுங்கள். தமிழினம் என்ற இனத்தைச் செம்மைப்படுத்தும் விழா தைப்பொங்கல். இந்த நல்ல நாளில் அனைவரையும் வாழ்த்தி பெரியோரை வணங்கி வளமும் நலமும் சிறக்க இறைவன் அருளட்டும் என்று வேண்டுகிறேன்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.