குமரிக் கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை ; 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
1 min read
Depression near Kumarik Sea; Chance of rain for 3 days
14.1.2021
குமல்கடல் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதனால் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
குறைந்த தாழ்வு நிலை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடையும் நிலையில் இன்னும் மழை பெய்கிறது. தென் மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 12-ந்தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், தற்போது 16-ந்தேதி வரை சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் வளிமண்டலத்தில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலையாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று(புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
இதன் காரணமாக தென் கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழையும் இன்றும் (வியாழக்கிழமை) , நாளையும் (வெள்ளிக்கிழமை) பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் இந்த நாட்களில் வறண்ட வானிலையே நிலவும்.
அதேபோல், நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் (17-ந்தேதி) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.
தமிழகத்தில் நேற்று(புதன்கிழமை) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், ‘ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்திருக்கிறது. அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் 28 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சேத்தியாத்தோப்பு 21 செ.மீ., புவனகிரி 20 செ.மீ., பாபநாசம் 19 செ.மீ., மணிமுத்தாறு 17 செ.மீ., சிதம்பரம் 16 செ.மீ., பெலந்தூரை 14 செ.மீ., சீர்காழி 12 செ.மீ., திருவிடைமருதூர் 11 செ.மீ., அம்பாசமுத்திரம், விருதாச்சலம் தலா 10 செ.மீ. உள்பட பெரும்பாலான இடங்களில் மழை பெய்து இருக்கிறது.