தமிழகத்தில் 23-ந் தேதி வரை மழை பெய்யும் இடங்கள் விவரம்
1 min read
Details of rain places in Tamil Nadu till 23rd
21.1.2021
தமிழகத்தில் 23ந் தேதி வரை பெய்யும் இடங்கள் விவரத்தை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
லேசான மழை
இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ( வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
22.1.2021 அன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக்கூடும்.
23.01.2021 முதல் 25.01.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையில்…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப்பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.