4 கிலோ உணவு சாப்பிட்டால் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் இலவசம்
1 min read
Royal Enfield motorcycle is free if you eat 4 kg of food
21.1.2021
கொரோனா காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 4 கிலோ உணவை சாப்பிட்டால் ஒரு ராயல் என்பீல்டு பைக் இலவசம் என்று ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.
4 கிலோ உணவு
மராட்டிய மாநிலம் புனேவில் அதுல் வாய்கர் என்பவர் ஒட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டலை தொடங்கினார். இவரின், ஓட்டலில் பிரமாண்ட தட்டுகளில் உணவு வழங்கப்படும். ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு, மால்வானி மீன் சாப்பாடு உள்ளிட்ட 6 வகை உணவு வகைகள் இந்த ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரக உணவும் ரூ.2,500 மதிப்புடையது.
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக இவரின் ஓட்டலில் விற்பனை சற்று குறைந்தது. ஆனால் வாடிக்கையாளர்களை கவர புதுவகை அறிவிப்பை வெளியிட்டது.
உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 4 கிலோ எடை கொண்ட புல்லட் தாலி என்னும் உணவு பிளேட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்தால் ராயல் புல்லட் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்று அதுல் அறிவித்தார்.
புல்லட் தாலி என்பது ஒரு காய்கறி எதுவும் இல்லாதா தட்டு ஆகும், இது 4 கிலோ மட்டன் மற்றும் வறுத்த மீன்களுடன் தயாரிக்கப்பட்ட சுமார் 12 வகையான உணவுகளைக் கொண்டுள்ளது.
வறுத்த மீன், பொம்ஃப்ரெட் வறுத்த மீன் , சிக்கன் தந்தூரி, மட்டன் சுக்கா,மட்டன் கிரேவி , சிக்கன் மசாலா மற்றும் இரால் பிரியாணி உள்ளிட்ட உணவுகள் தட்டு நிறைய இருக்கும். 55 சமையல் கலைஞர்கள் இணைந்து இந்த பிரமாண்ட உணவு ரகங்களை தயார் செய்வார்கள். ஒரு மணி நேரத்தில் இந்த தட்டை காலி செய்தால் ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள ராயல் என்பீல்டு பைக் பரிசாக கிடைக்கும்.
வெற்றி
பல இளைஞர்கள் கலந்து கொண்டு அதுல் வாய்கர் அறிவித்த போட்டியில் வெற்றி பெற முயன்றனர். ஆனால், ஒரே ஒருவர்தான் வெற்றி பெற்றுள்ளார். சோலாப்பூரைச் சேர்ந்த அந்த இளைஞரின் பெயர் சோம்நாத் பவார் என்பதாகும்.
எனினும், விடா முயற்சியாக ஒரு தட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட பல இளைஞர்கள் முயற்சித்து வருகின்றனர். வெற்றி பெறுவர்களுக்கு வழங்குவதற்காக அதுல் வாய்கர் ரெஸ்டாரன்ட்டில் எப்போதும் 5 ராயல் என்பீல்ட் பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு இந்த குறைந்தது 65 பேர் பிரமாண்ட உணவு தட்டை காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஓட்டல் உரிமையாளர் அதுல் வாய்கர் கூறியுள்ளார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த ஓட்டல் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான பரிசு திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.